

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், 2026 FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி தனது இரண்டாவது உலகப் கோப்பை பட்டத்தைக் கைப்பற்றியது. 1 - 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின், 23வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
2026ம் ஆண்டிற்கான ஃபிஃபா(FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி புதிய சாம்பியனாக மகுடம் சூடியுள்ளது. நியூயார்க்/நியூஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில், பெர்ரான் டோரஸ் (Ferran Torres) கூடுதல் நேரத்தில் அடித்த கோல் மூலம் ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
ஸ்பெயின் அணி ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்றது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளின் ஃபிஃபா உலகக் கோப்பை பட்டங்களையும் ஒரே நேரத்தில் தன்வசம் வைத்துள்ள முதல் நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றுள்ளது.
போட்டி தொடங்கியதில் இருந்தே இரண்டு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. அத்துடன் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இரண்டு அணிகளும் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியாமல் போயின. இதனால் 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் கோல் இன்றி சம நிலையில் இருந்தது. இதை அடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் பொழுது தான் ஆட்டம் விறுவிறுப்பு அடைந்தது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியின் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த பெர்ரான் டோரஸ் பந்தை அர்ஜென்டினாவின் வலைக்குள் செலுத்தி ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிரச் செய்தார். அந்த ஒரு கோலே ஸ்பெயினின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
ஆட்டத்தின் 93வது (90+3) நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் நடுகள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால் அர்ஜென்டினா அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் அந்த அணி மீதி ஆட்டத்தை 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஸ்பெயின் வீரர் பெர்ரான் டோரஸ் அபாரமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்த பிறகும், அர்ஜென்டினா சமநிலை கோலுக்காக கடுமையாகப் போராடியது. இருந்தும் ஸ்பெயின் வீரர்கள் சிறப்பாக தற்காப்பில் செயல்பட்டு முன்னிலையை தக்க வைத்தனர்.
எமிலியானோ மார்டினெஸ், அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பரான இவர் இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் கோல் முயற்சிகளைப் பலமுறை மிகவும் சாதுரியமாகத் தடுத்து நிறுத்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரம் வரை ஸ்பெயின் அணியை கோல் எதுவும் எடுக்காமல் வைத்திருந்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
லியோனல் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை போட்டியாகக் கருதப்பட்ட இந்த போட்டியில், ஸ்பெயின் அணியின் பலமான ஆட்டத்தால் அர்ஜென்டினாவால் கோல் எதுவும் பெற முடியாமல் போனது. யூரோ 2024 சாம்பியனான ஸ்பெயின், தற்பொழுது உலக மற்றும் ஐரோப்பிய சாம்பியனாக விளங்குகிறது. இந்த உலகக் கோப்பையையும் கைப்பற்றியதால் சர்வதேச கால்பந்து உலகின் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது.
ஸ்பெயின் அணி 2024 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 38 தொடர்ச்சியான சர்வதேச போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து ஸ்பெயினின் மாட்ரிட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் ஒன்று கூடி கோலாகலமாகத் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உலகக்கோப்பையை வழங்கினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர்.