

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக உலக அளவில் மிகவும் பிரபலமான வீரர் வைபவ் சூர்யவன்சி. இவரது ஆட்டத்தை பார்த்து இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களும் பாராட்டி வருகின்றனர். தற்போது துலீப் டிராபியில் 57 வருட சாதனையை முறியடித்துள்ளார் சூர்யவன்சி.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த சூர்யவன்சி, தற்போது சிவப்பு நிற பந்திலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 12 வயதிலேயே பீகார் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய வைபவ் சூர்யவன்சி 14வது வயதில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக களம் இறங்கினார்.
அறிமுக தொடரிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் சதத்தையும் பதிவு செய்தார். 14 வயதிலேயே ஐபிஎல் தொடரில் சதம் அடித்ததன் மூலம், வெகு விரைவிலேயே இவர் இந்திய அணியில் விளையாடும் தகுதியை பெறுவார் என பலரும் தெரிவித்தனர்.
நடப்பாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சூர்யவன்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத சூர்யவன்சி சொற்ப ரன்களிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் முதல் டி20 போட்டியிலேயே அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் நடப்பு துலீப் தொடரில் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சூர்யவன்சி.
துலீப் கோப்பை தொடரில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் சூர்யவன்சி. இதற்கு முன்னதாக 16 ஆண்டுகள் 23 நாட்களில் லட்சுமணன் சிங் என்ற வீரர் துலீப் கோப்பையில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது. ஆனால் சூர்யவன்சி இன்று அரைசதம் அடித்ததன் மூலம் லட்சுமணன் சிங்கின் 57 ஆண்டு கால சாதனையைத் தகர்த்துள்ளார் சூர்யவன்சி. 15 ஆண்டுகள் 157 நாட்களில் அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடருக்கு முன்னதாக கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக சூர்யவன்சி நியமிக்கப்பட்டார். தற்போது நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் கேப்டன் இஷான் கிஷன் காயம் ஏற்பட்டதால், சூர்யவன்சிக்கு அணியை வழிநடத்தி வருகிறார்.
துலீப் டிராபியின் முதல் அரை இறுதியில் சென்ட்ரல் சோன் அணிக்கு எதிரான போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்சி, 81 பந்துகளில் 92 ரன்களைக் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவண்டரிகள் அடங்கும். இன்னும் 8 ரன்களை எடுத்திருந்தால் இளம் வயதில் சதமடித்த சாதனையை அவர் படைத்திருப்பார். இருப்பினும் 2வது இன்னிங்ஸில் சூர்யவன்சி சதமடித்தால் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க வாய்ப்புள்ளது.
இரு அணிகளும் முதல் இன்னிங்சில் தலா 266 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில், தற்போது சென்ட்ரல் சோன் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் சென்ட்ரல் சோன் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை எடுத்துள்ளது. நாளை மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ள சூழலில், விரைந்து விக்கெட்டுகளை எடுத்தால் கிழக்கு மண்டல அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.