

குழந்தை பிறந்த ஆரம்ப மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதில் ஏற்படும் சவால்கள் – குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முழுமையான தகவல்களை வழங்குகிறார் மருத்துவர் க.ராவணன் M.D. குழந்தைகள் நல மருத்துவர்.
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது வெறும் உணவல்ல; அது முதல் தடுப்பூசி, முதல் மருந்து, முதல் நோய் எதிர்ப்பு சக்தி ஆகும்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு மாதங்கள், தாய்ப்பால் கொடுப்பதில் பல தாய்மார்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். குழந்தை மார்பகத்தைப் பிடித்து உறிஞ்ச மறுப்பது, காம்பில் புண் (Nipple Sore), பால் போதவில்லை என்ற அச்சம், வேலைப்பளு, குடும்பத்தினரின் தவறான ஆலோசனைகள் ஆகிய காரணங்களால் பலர் புட்டிப்பால், பவுடர் பால் அல்லது பசும்பாலுக்கு மாறிவிடுகிறார்கள்.
ஆனால், பெரும்பாலான தாய்ப்பால் பிரச்னைகளுக்கு தீர்வு உள்ளது. சரியான ஆலோசனை கிடைத்தால் பெரும்பாலான தாய்மார்களால் முழுமையாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.
பிறந்த முதல் இரண்டு மாதங்களில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:
1. குழந்தை மார்பகத்தைப் பிடித்து உறிஞ்ச மறுப்பது
காரணங்கள்:
தவறான நிலை (Poor Positioning).
தவறான Latch.
குழந்தைக்கு மூக்கடைப்பு.
பிறந்தவுடன் புட்டிப்பால் கொடுக்கப்பட்டதால் ஏற்படும் Nipple Confusion.
முன்கூட்டியே பிறந்த குழந்தை (premature)
மஞ்சள் காமாலை காரணமாக அதிக தூக்கம், சோர்வு
தாய்–குழந்தை பிரிவு.
தீர்வு:
சரியான Position மற்றும் Latch கற்றுக்கொடுக்க வேண்டும்.
சரும அரவணைப்பை (Skin-to-Skin Contact) அதிகப்படுத்த வேண்டும்.
குழந்தை அழுவதற்கு முன்பே, பசியின் ஆரம்ப அறிகுறிகளில் மார்பகத்தில் வைக்க வேண்டும்.
குழந்தை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால் தற்காலிகமாக ஓரிரு நாட்கள் மட்டுமே தாய்ப்பாலை பிழிந்து (Expressed Breast Milk) கப் மற்றும் ஸ்பூன் அல்லது பாலடை மூலம் கொடுத்து, மீண்டும் மார்பகப் பிடிப்பை தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
பாட்டில் (Bottle) கொடுப்பதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
2. காம்பில் புண் (Nipple Sore)
பெரும்பாலும் காரணம்:
தவறான Latch.
குழந்தை காம்பை மட்டும் உறிஞ்சுதல்.
தவறான முறையில் மார்பகத்திலிருந்து குழந்தையை பிரித்தல்.
தீர்வு:
Latch-ஐ சரிசெய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறை பால் கொடுத்த பிறகும் சில சொட்டு தாய்ப்பாலை காம்பில் தடவி உலர விடலாம்.
சோப்பு, ஆல்கஹால் போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது.
வலி இருந்தாலும் தாய்ப்பாலை நிறுத்தக் கூடாது.
3. 'பால் போதவில்லை' என்ற அச்சம்
இது மிகவும் பொதுவான பிரச்னை.
உண்மையில் பெரும்பாலான தாய்மார்களுக்கு போதுமான பால் சுரக்கிறது.
பால் போதுமானதற்கான அறிகுறிகள்:
குழந்தை நன்றாக சிறுநீர் கழிக்கிறது.
உடல் எடை அதிகரிக்கிறது.
பால் குடித்த பிறகு திருப்தியாக சிரித்து விளையாடுகிறது அல்லது நன்றாக உறங்குகிறது.
பால் அதிகரிக்க:
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
இரவிலும் தாய்ப்பால் கொடுக்கவேண்டும் .
தாய் போதுமான தண்ணீர், உணவு மற்றும் ஓய்வு எடுக்க வேண்டும்.
குழந்தை உறிஞ்சுவதுதான் பால் சுரப்பை அதிகரிக்கும் ஆகச் சிறந்த வழி
ஏன் பாட்டில் பால் (Bottle Feeding) தவிர்க்க வேண்டும்?
பாட்டில் மூலம் Nipple Confusion ஏற்படலாம்.
குழந்தை மார்பில் உறிஞ்சி குடிப்பதை மறந்து விடும்.
தொற்று அபாயம் அதிகரிக்கும்.
சுத்தம் சரியாக இல்லையெனில் வயிற்றுப்போக்கு அதிகரிக்கும்.
அதிகமாக பால் குடிக்கும் பழக்கம் உருவாகலாம்.
பவுடர் பால் (Formula Milk) – எப்போது மட்டும்?
Formula Milk மருத்துவக் காரணங்களால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
குழந்தை நல மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே தொடங்க வேண்டும்.
வசதிக்காக அல்லது “பால் போதவில்லை” என்ற எண்ணத்தால் ஆரம்பிக்கக் கூடாது.
ஆறு மாதத்திற்கு முன் பசும்பால் ஏன் கொடுக்கக்கூடாது?
செரிமானத்திற்கு ஏற்றதல்ல.
சிறுநீரகத்திற்கு அதிக சுமை.
இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
குடலில் சிறிய இரத்தக்கசிவு ஏற்படலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது.
தாய்ப்பாலை நிறுத்துவதால் ஏற்படும் விளைவுகள்
குடல் தொற்றுகள்
வயிற்றுப்போக்கு.
வாந்தி.
நீரிழப்பு.
சுவாசப்பாதை தொற்றுகள்
சளி.
நிமோனியா.
காது தொற்று.
மற்ற விளைவுகள்
மருத்துவமனையில் அனுமதி அதிகரிக்கும்.
எதிர்காலத்தில் உடல் பருமன் மற்றும் சில வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம்.
தாய்–குழந்தை பிணைப்பு குறையலாம்.
பொதுவாக நாம் செய்யும் தவறுகள்
“பால் வரவில்லை” என்று முதல் வாரத்திலேயே Formula ஆரம்பித்தல்.
குழந்தை அழுதால் பால் போதவில்லை என்று நினைத்தல்.
இரவில் தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது.
பாட்டிலை விரைவாக அறிமுகப்படுத்துவது.
குடும்பத்தினரின் அறிவியல் ஆதாரமற்ற ஆலோசனைகளைப் பின்பற்றுவது.
பெற்றோருக்கான வழிகாட்டுதல்கள்
பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பாலைத் தொடங்குங்கள்.
முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுங்கள்.
குழந்தை கேட்கும் போதெல்லாம் பால் கொடுங்கள்.
குழந்தைக்கு சரியான நிலையில் மார்பகத்தை வாயில் கவ்வ கற்றுக்கொடுங்கள்.
பால் போதவில்லை என்று முடிவு செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுங்கள்.
Nipple Sore இருந்தாலும் தாய்ப்பாலை நிறுத்தாதீர்கள்.
பாட்டிலை அறவே தவிர்த்திடுங்கள்.
கப், ஸ்பூன் அல்லது பாலடை மூலம் பாலை கொடுங்கள்.
Formula Milk-ஐ மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்.
ஒரு வருடத்திற்கு முன் பசும்பால் கொடுக்காதீர்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய் போதுமான உணவும் ஓய்வும் பெற வேண்டும்.
குடும்பத்தினர் தாயை விமர்சிக்கக் கூடாது, ஊக்குவிக்க வேண்டும்.
ஒவ்வொரு தாய்ப்பால் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குடும்பத்தின் பங்கு
தாய்ப்பால் கொடுப்பது தாயின் பொறுப்பு மட்டுமல்ல; குடும்பத்தின் பொறுப்பும் ஆகும்.
தாய்க்கு போதுமான ஓய்வு அளிக்க வேண்டும்.
வீட்டுப் பணிகளில் உதவ வேண்டும்.
மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
“பால் போதவில்லை” என்று அச்சப்படுத்தாமல் ஊக்கப்படுத்த வேண்டும்.
தேவையானால் தாய்ப்பால் ஆலோசகர் (Lactation Counsellor) அல்லது குழந்தை நல மருத்துவரின் உதவியை உடனே பெற வேண்டும்.
புட்டிப்பால் ஒரு எளிய தீர்வாகத் தோன்றலாம்; ஆனால் தாய்ப்பால் ஒரு வாழ்நாள் ஆரோக்யத்திற்கு முதலீடு.