

மனிதனின் ஆயுள் காலம் நூறு வருஷங்கள் என்று பொதுவாக இருக்கும் போது, யாரும் அந்த ஆயுளை அடைவதில்லையே? இதற்கு காரணம் என்ன என்று திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து சந்தேகம் எழுப்ப, அதற்கு விதுரர் கூறிய பதிலில் ஆறு விஷயங்கள் தான் மனிதனின் ஆயுளை குறைக்கின்றது என்றும், அவை என்ன என்பதையும் விளக்கி கூறினார்.
1. அதிககர்வம்: எந்த மனிதன் தானே மிகவும் கெட்டிக்காரன்; தானே மிகுந்த பணக்காரன்; தானே தர்மம் செய்யும் கொடையாளி; தன்னைத் தவிர மற்றவர்கள் கெட்டவர்கள் என்ற எண்ணத்தோடு இருக்கிறானோ அவன் சீக்கிரமே அழிந்து போவான். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் குற்றங்களை பார்த்து நிவர்த்தி செய்ய வேண்டும். மற்றவர்கள் விஷயத்தில் அவர்களின் குணத்தை பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுதல்: பகவான் கிருஷ்ணர் தனது கீதையில் கூறியிருப்பது கடுமை இல்லாமலும், உண்மை மாறாமலும், பிரியமானதும் நன்மையைக் கருதியுமான வார்த்தைகளை மீறாமல் வரும் வார்த்தைகளே வாக்கினால் செய்யப்படும் தவம் என்றார். இதனை மீறி, அதிகபிரசங்கி போல் பேசி, மற்றவர்களளை வம்பிழுக்கும் மனிதனின் ஆயுள் காலம் குறையும்.
3. தியாகமனப்பான்மை: எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்கிற பேராசை கொள்ளும் மனிதனிடத்தில் தர்ம சிந்தனை இருக்காது. இந்த மனித படைப்பே தனக்கானது அல்ல, பிறருக்கு உதவுவதற்குதான் என்ற பெருந்தன்மை இல்லாமல் போவது. இவை தான், ஆயுளை குறைக்கும்.
4. கோபம்: தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகம் இழந்து, பாவங்களை செய்யும் மனிதனின் ஆயுள் காலம் குறையும். வாழ்க்கையில் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்; யார் நம்மை கோபித்துக் கொண்டாலும், அவர்கள் இடத்தில் நிதானமாக பேசி, அதற்கு நல்ல தீர்வைத் தரவேண்டும். அப்படி நடக்கவில்லை என்றால் ஆயுள் காலம் குறையும்.
5. சுயநலம்: மனிதனின் எல்லா தீய செயலுக்கும் அவனுடைய சுயநலம்தான் காரணம். இதன் செயலாலும் ஆயுள் காலம் குறையும். மற்றவர்கள் இன்புற்றால் நம் கண்கள் மகிழ வேண்டும். பிறர் துன்புறும்போது, அதற்காக நம் மனம் உருக வேண்டும்.
6. நட்புக்கு துரோகம்: வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. எந்த காலத்திலும் அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது. அது மன்னிக்க முடியாத குற்றம். அந்த செயலை செய்யும் மனிதனுக்கு ஆயுள் குறையும். பகவான் தனது கீதையில் கூறியபடி எல்லோரிடமும் வெறுப்பின்றியும் நட்பு மனப்பான்மையுடன் கருணையுடனும் பழக வேண்டும்.
இந்த கட்டுரையின் நோக்கமே ஒவ்வொரு மனிதனும் மனித விலாசத்தோடு வாழ வேண்டும் என்பதே. அப்படி வாழும் மனிதனுக்கு, அவனுடைய ஆயுளும் அவனுடன் விசுவாத்தோடு கூட வரும்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)