

உடலின் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு, தாய் நோயாக நீரிழிவுநோய் இருக்கிறது என்றால் மிகையல்ல. நீரிழிவு நோய் வந்தால், அதன் சகோதரனான உயர் இரத்த அழுத்தத்தையும் கூடவே கொண்டு வந்து விடும். இந்த இரண்டு நோய்களும், உடலுக்கு எந்த வகையில் எல்லாம் தீமை செய்யலாம் என்பதை திட்டமிட்டு செயலாற்றுகின்றன.
அமைதியான கொலையாளிகள் என்றழைக்கப்படும் இந்த இரு நோய்களும் மனிதர்களின் இதயம், சிறுநீரகம் மற்றும் கண்களை பாதிக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், பெரும்பாலும் நாம் அறியப்படாத ஒன்று நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் காதுகேட்கும் திறனையும் பறிக்கக் கூடியவை என்பது தான். சமீபத்திய ஆய்வுகள் இதை உறுதி செய்வதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோய் எவ்வாறு கேட்கும் திறனை பாதிக்கிறது?
நம் உடலில் இருந்து காதுகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் மிகவும் மென்மையானவை. நீரிழிவு நோய் என்பது இரத்த நாளங்களை சிறிது சிறிதாக சேதமடைய வைக்க கூடியது. இரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் அதிகமாக இருக்கும்போது, நுண்ணிய இரத்த நாளங்கள் சிதைவடைகிறது, இதனால் உள்காதிற்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதில் காதுக்குள் இருக்கும் காக்லியா பகுதியில் உள்ள நரம்பு செல்கள் சேதமடைவதால், மூளைக்கு ஒலியை கடத்தும் வேகம் குறைகிறது.
இதனால் காதின் கேட்கும் திறன் வெகுவாக குறைந்து செவித்திறன் மந்தமாகி விடுகிறது. இதுபற்றி அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) நடத்திய ஆய்வில் மற்றவர்களிடம் ஒப்பிடும் போது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, செவித்திறன் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
உயர் இரத்த அழுத்தம் எவ்வாறு செவித்திறனை பாதிக்கிறது?
உயர் இரத்த அழுத்தம் காதுகளில் உள்ள மென்மையான திசுக்களில் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த அழுத்தம் அதிகமாகும் போது காதுக்குள் உள்ள திரவத்தின் அழுத்தம் மாறி, காதில் அடைப்பு ஏற்பட்ட உணர்வு ஏற்படும். தொடர்ச்சியாக இரத்த அழுத்தம் நீண்ட காலமாக உயரும் போது நரம்புகளுக்குள் அதிக அழுத்தம் உண்டாகி, அவை செயலிழந்து சில நிமிடங்களிலேயே கேட்கும் திறன் இல்லாமல் போகும். இது திடீர் செவித்திறன் இழப்பு என்றழைக்கப்படுகிறது.
இந்த செயல்முறை மிகவும் அரிதாகத் தான் தோன்றும் என்றாலும் கூட ஆபத்தானது. இதை முன்கூட்டியே கண்டறிந்தால் செவித்திறன் இழப்பைத் தவிர்த்து இருக்கலாம்.
செவித்திறன் பாதிப்பின் முன்அறிகுறிகள்:
பின்வரும் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், விரைவாக செயல்பட்டு, மருத்துவரை அணுகி முன்கூட்டியே சிகிச்சையை தொடங்கினால், பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.
* காதுக்குள் எப்போதும் ஒரு ரீங்கார சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
* வழக்கத்தை விட டிவி அல்லது ஸ்பீக்கர் ஒலியினை உயர்த்தி கேட்பது.
* கூட்டமான இடங்களில் பேசுவது புரியாமல் தவிப்பது.
* போனில் பேசும் போது எதிர் குரல்கள் பேசுவது குறைவாக கேட்பது.
* திடீரென்று சத்தம் உயர்த்தி பேசும் பழக்கம் வருவது.
* பின்னால் வரும் வாகனங்களின் சத்தங்கள் தெளிவாக கேட்காமை ஆகியவை.
செவித்திறனை காப்பது எப்படி?
நீரிழிவு நோய் இருக்கிறதா? என்ற சோதனையை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் எடுத்து பார்க்கவும். நீரிழிவு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி வரவேண்டும். 40 வயதிற்கு மேல் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை 'ஆடியோமெட்ரி' என்னும் செவித்திறன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் பாதிப்பு இருப்பின் மருத்துவரை அணுகவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)