
கோடைக்காலத்தில் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கடும் வெயிலில் உடலில் உள்ள ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுகிறது. இதனால் கோடைக் காலத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது அவசியம். இந்த காலத்தில் தினசரி அசைவம் சாப்பிடும் நபர்கள் அதன் மூலம் தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், தினசரி அல்லது வாரத்தில் அதிக நாட்கள் அசைவ உணவை சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் கோடை காலத்தில் அசைவ உணவுகளை குறைத்துக் கொள்வது நலம்.
வெயில் காலங்களில் ஆரோக்கியமான நீரேற்றம் நிறைந்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். உடலை குளிர்விக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடுவது நலம் தரும். நீங்கள் அசைவ உணவை விரும்பினால், அதை குறைவாக கோடையில் சாப்பிடுங்கள். பெரும்பாலும் இறைச்சி வகைகள் உடல் சூட்டினை அதிகரிக்கும் என்பது பொதுவான ஒரு காரணமாகும்.
அசைவ உணவுகளில் கோழி, ஆட்டிறைச்சி, மீன், முட்டை மற்றும் கடல் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதிலிருந்து உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கின்றன. இறைச்சி, மீன் மற்றும் முட்டையில் புரதம் அதிகமாக கிடைக்கிறது. இது தசைகளை வலுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இவற்றில் வைட்டமின் பி12 அதிகமாக உள்ளது. இது தவிர, இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் டி மற்றும் பல வைட்டமின்களும் உள்ளன. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைக்கவும் இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைக் காலத்தில் அசைவ உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும். இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இதனால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் வெப்பம் உடலில் உள்ள நீர்சத்தினை உறிஞ்சி விடும். இதனால் உடலின் நீர்சத்து குறைந்து மயக்க நிலை கூட ஏற்படலாம். இதனால் உடல்நலத்தில் சரியாக கவனம் செலுத்த வேண்டும்.
கோடை காலத்தில் உங்கள் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
கோடையில் அசைவ உணவுப் பிரியர்கள் தவிர்க்க முடியாமல், அசைவம் சாப்பிட நேரும் போது இந்த உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவது வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும். அசைவ உணவுகளுடன் கட்டாயம் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்தவும் உடலை குளிர்விக்கவும் உதவுகிறது. அது போல புதினாவையும் அசைவ உணவு சமைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அதை சாறாக பருகி பலன் பெறலாம்.
அசைவ உணவுகளில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் அல்லது உணவுடன் எலுமிச்சை பழச்சாறு பருகலாம். இது உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது. அசைவ உணவு உண்ட பின் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உடலில் நீரேற்றத்தை பராமரிக்கும். அசைவ உணவு சாப்பிட்டதும் மோர் பருகுவது உடலை குளிர்வித்து வெப்ப சமநிலையை பராமரிக்கும்.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.)