நம்மில் பலருக்குக் காலைப் பொழுது ஒரு கோப்பை காபியுடன் தான் தொடங்குகிறது. நீண்ட காலமாக 'காபி உடலுக்குத் தீங்கானது' என்ற பொதுவான கருத்து நிலவி வந்தது. ஆனால், சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதனைத் தவறு என நிரூபித்துள்ளன. 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் வெளியான தரவுகளின்படி, சரியான அளவில் காபி (coffee) அருந்துவது கொடிய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
காலையில் காபி குடித்தால் ஆயுள் கூடும்:
2025 ல் European Heart Journal வெளியிட்ட ஆய்வு, காபி குடிக்கும் நேரத்திற்கும் நமது ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறது. குறிப்பாக, காலை 4 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் காபி குடிப்பவர்களுக்கு, இதய நோயால் ஏற்படும் மரண அபாயம் 31 சதவீதம் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிற்பகலுக்கு மேல் காபி (coffee) குடிப்பது உடலின் இயற்கையான உறக்கச் சுழற்சியைப் பாதிக்கக்கூடும். ஆனால், காலை நேரக் காபி, உடலின் செரிமான ஆற்றலைச் சீராக்கி, நீண்ட ஆயுளுக்குத் துணைபுரிகிறது.
இரட்டைப் பாதுகாப்பு:
இதயம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டிற்கும் காபி ஒரு சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது. காபி குடிப்பதால் இதயத் துடிப்பு சீரற்ற நிலை ஏற்படும் என்று முன்பு கருதப்பட்டது. ஆனால், ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கப் காபி குடிப்பவர்களுக்கு இதயம் மற்றும் வளர்சிதை மாற்றம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் 48 சதவீதம் குறைவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், காபியில் உள்ள இயற்கை வேதிப்பொருட்கள் இன்சுலின் சுரப்பைச் சீராக்கி, டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கின்றன.
கல்லீரல் மற்றும் புற்றுநோய் தடுப்பு:
மது அருந்தாதவர்களுக்கும் இன்று கல்லீரலில் கொழுப்பு படிதல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காபியை விடச் சிறந்த நண்பன் வேறு யாருமில்லை எனலாம். காபி (coffee) குடிப்பது கல்லீரல் திசுக்கள் தழும்பாக மாறுவதைத் தடுத்து, கல்லீரல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்குப் பெருங்குடல், புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் வராமல் தடுப்பதில் காபி முக்கியப் பங்கு வகிப்பதாக அமெரிக்கப் புற்றுநோய் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
மூளை ஆரோக்கியம்:
மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் காபி ஒரு கவசமாகச் செயல்படுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் மறதி நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோய்களைத் தடுப்பதில் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன.
2025-ஆம் ஆண்டில் நடுத்தர வயதுப் பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் இரண்டு முதல் மூன்று கப் காபி குடிக்கும் பெண்களுக்கு முதுமையில் மூளைத் திறன் மங்குவது வெகுவாகக் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெண்களை நீண்ட காலம் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
எப்படி குடித்தால் முழுப்பலன் கிடைக்கும்?
காபியின் நன்மைகள் அதைப் பருகும் முறையிலேயே அடங்கியுள்ளது. அதிகச் சர்க்கரை மற்றும் பாலேடு சேர்ப்பது காபியின் மருத்துவக் குணங்களைக் குறைத்துவிடும். எனவே, சர்க்கரை இல்லாத கறுப்புக் காபி அல்லது குறைந்த சர்க்கரை சேர்த்துக் குடிப்பதே சிறந்தது. ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கோப்பை காபி பருகுவது ஆரோக்கியமானது. அதேபோல், ஆழ்ந்த உறக்கத்தைப் பெற, உறங்குவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே காபி குடிப்பதை நிறுத்திக் கொள்வது அவசியம்.
நவீன மருத்துவ உலகம் காபியை ஒரு கசப்பான மருந்தாகவே பார்க்கிறது. முறையான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுடன், சரியான நேரத்தில் காபி (coffee) பருகுவதை வழக்கமாக்கிக் கொண்டால், இதய நோய் முதல் புற்றுநோய் வரை பல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.