இன்றைய நாளில் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நமது முன்னோர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தன. அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகைதான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச் செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடியாகும். இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நம்மூர் காடுகளிலும் புதரென வளர்ந்து விடுகிறது.
அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்தச் செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும்.
இத்தாவரம் வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தவை. இவை வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்தச் செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.
இந்த இலைக்கு எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல் உண்டு. முதுகுத் தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும்போது வரும் எரிச்சலைப் போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். பெண்களின் கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி இரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்களை அழிக்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப்போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் தணிக்கும். மேலும், அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். உடல் சுளுக்கைக் கூட இந்த இலை எடுத்து விடும். மூல வியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதி ஆகியவற்றையும் சரி செய்யும். சுவாச பாதிப்பைப் போக்கும்.
இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடி விடும். இதேபோல், இந்த இலையை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்துதான். இந்த இலைகளை சிறிது எடுத்து, நன்கு மைய அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.
இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.
பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப்போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆற வைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டு வலி சரியாகும். குடல் புழு அழியும். இரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.
ஞாபக சக்தியை அதிகரிப்பது, கண் வீக்கம், வலியை போக்குவது என இதன் பயன்கள் இன்னும் அதிகம். ஆனால், இதை தகுந்த சித்த மருத்துவர் ஒருவரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின் பேரிலேயே பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.