

ஹோலிப் பண்டிகை என்றாலே வண்ணங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் எப்போதுமே குறைவிருக்காது. நண்பர்கள், உறவினர்கள் மீது விதவிதமான கலர் பொடிகளைத் தூவியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விளையாடுவது பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். ஆனால் இப்படிச் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் நேரங்களில், நமது கண்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய ஆபத்தை நாம் பல நேரங்களில் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
வெறிகொண்டு விளையாடும்போது திடீரென வண்ணப் பொடிகள் கண்ணுக்குள் சென்றுவிட்டால், உடனே அதை கைகளால் தேய்த்துக் கசக்குவதுதான் நமது முதல் ரியாக்ஷனாக இருக்கும். அந்த ஒரு சின்னச் செயல் எவ்வளவு பெரிய விபரீதத்தை உருவாக்கும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வண்ணங்களுக்குப் பின்னால் இருக்கும் ஆபத்து!
நாம் கடைகளில் வாங்கும் பல வண்ணப் பொடிகள் நூறு சதவீதம் இயற்கையானவை என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவற்றின் உள்ளே ரசாயனங்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய மைக்கா துகள்கள் கட்டாயம் கலந்திருக்கும். இந்த கெமிக்கல் பொடிகள் நமது கண்ணில் பட்டு தண்ணீரோடு கலக்கும்போது, கடுமையான எரிச்சலும் வலியும் உருவாகிறது. அந்தப் பதற்றத்தில் நாம் அசுத்தமான கைகளால் கண்களைக் கசக்கும்போது, அந்த ரசாயனத் துகள்கள் கருவிழியை மிக மோசமாக உரசத் தொடங்கிவிடும்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள், ஹோலி பண்டிகை நாட்களில் கண்கள் சிவந்து போய் எரிச்சலோடு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிடுகிறது என்று எச்சரிக்கிறார். ரசாயனத் துகள்கள் கண்ணில் பட்டவுடன் மணல் போல மாறிவிடுவதால், அதை கசக்குவது மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கண்ணில் பொடி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
கண்ணுக்குள் கலர் பொடி சென்றுவிட்டால் முதலில் கைகளால் தொடுவதை நிறுத்திவிட்டு, உடனே சுத்தமான தண்ணீரைக் கொண்டு கண்களை நன்றாகக் கழுவ வேண்டும். அடிக்கடி கண்களைச் சிமிட்டிக்கொண்டே இருந்தால், உள்ளே இருக்கும் தூசிகளை கண்ணீரே இயற்கையாக வெளியேற்றிவிடும்.
ஒருபோதும் ரோஸ் வாட்டர், பால், நெய் அல்லது வீட்டில் சும்மா கிடக்கும் ஏதோ ஒரு ஐ ட்ராப்ஸை எல்லாம் கண்ணில் ஊற்றவே கூடாது. அது நிலைமையை இன்னும் மோசமாக்கி அதிக தொற்றுகளை உருவாக்கிவிடும். இதையெல்லாம் செய்த பிறகும் கண் சிவப்பாகவே இருந்தாலோ அல்லது பார்வை மங்கலாகத் தெரிந்தாலோ கொஞ்சமும் தாமதிக்காமல் ஒரு கண் மருத்துவரைச் சந்திப்பதுதான் ஒரே புத்திசாலித்தனம்.
ஆபத்து வந்த பின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதே எப்போதுமே சிறந்தது. ஹோலி விளையாடச் செல்லும்போது பாதுகாப்பிற்காக ஒரு சன்கிளாஸ் அணிந்து செல்வது பெருமளவு வண்ணங்கள் கண்ணில் படாமல் தடுக்கும். அதேபோல கண்களைச் சுற்றி ஓரங்களில் லேசாக தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்வதும் ரசாயனங்கள் தோலில் ஒட்டாமல் காக்கும்.
எந்தக் காரணம் கொண்டும் கண்களுக்கு உள்ளே எண்ணெயை விடக் கூடாது. மிக முக்கியமாக, முகத்தைத் தொடுவதற்கு முன்பாக உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவுவதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்ளுங்கள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)