

நடைப்பயிற்சி, நீச்சல், ஜாக்கிங், யோகா, நடனம் அல்லது கை கால்களை நீட்டி மடக்கி சிறிய பயிற்சிகள் என எது செய்தாலும், நம் உடல் எண்டோர்பின்கள் போன்ற நல்ல ரசாயனங்களை வெளியிடுகிறது.
அவை மூளைக்கு 'நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள்' என்று சிக்னல்களை அனுப்புகின்றன.
இதயதுடிப்புப் சுவாசமும் மேம்படுகிறது. தசைகள் இயல்பாகின்றன. மூளைக்கு ரத்த ஓட்டம் மேம்படுகிறது. அதிக ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கொண்டு வரப்படுவதால் நன்கு சிந்திக்க முடிகிறது.
நீங்கள் ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்யும் போதும் உங்கள் உடலும் மனமும் சமநிலைக்கு திரும்பி விட்டதாக அதற்கு தெரிவிக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மனதுக்கும் உணர்த்துகிறீர்கள்.
உடற்பயிற்சி மனதை எவ்வாறு அமைதிப்படுத்துகிறது:
உடற்பயிற்சி 'நல்ல உணர்வை' ஏற்படுத்தும் மூளை ரசாயனங்களை அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மூளை எண்டோர்பின், செரடோனின் மற்றும் டோபமைன் போன்ற இயற்கையான ரசாயனங்களை வெளியிடுகிறது.
என்டோர்பின் என்பது - உடலின் இயற்கையான வலி நிவாரணி. இது மனதை அமைதியாக வைத்திருக்கவும் உதவும். ஏதோ சாதித்தது போன்ற பரவச உணர்வையும் தரும்.
செரடோனின் - தூக்கம் மற்றும் பசியை ஒழுங்குபடுத்துகிறது.
டோபமைன் - உங்களுக்கு நிம்மதி மற்றும் மகிழ்ச்சியுணர்வை தருகிறது.
மன அழுத்தம் போக்க பல்வேறு மருந்துகள் உள்ளன. அவை செரடோனின் மற்றும் டோபமைன் அளவை அதிகரிப்பது மூலம் குணப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்தால் இவை இயற்கையாக நமக்கு கிடைக்கிறது.
உடற்பயிற்சி மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கிறது:
நாம் பதட்டமாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் போது நமது உடல் அட்ரினலின் மற்றும் கார்டிசோலை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் குறுகியகால மன அழுத்தத்தை சமாளிக்க நமக்கு உதவுகின்றன. ஆனால் அவை தொடர்ந்து அதிகமாக இருந்தால் அதன் காரணமாக நமக்கு பதற்றம் மற்றும் அமைதியின்மை ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இந்த ஹார்மோன்கள் குறையத் தொடங்குகின்றன. மேலும் உடல் மிகவும் தளர்வான நிலைக்குச் செல்கிறது. இதயத் துடிப்பு சீராகும். தசைகள் மென்மையாகும். மேலும் சுவாசமும் இயல்பாக மாறும்.
உடற்பயிற்சி உடலுக்குத் தேவையான ஆற்றல், நிம்மதியான தூக்கம் தருகிறது. உடல் போதிய ஓய்வெடுக்காவிட்டால் சோர்வடைந்த மனம் குணமடையாது. உடற்பயிற்சியினால் ஆழ்ந்த தூக்கம் மற்றும் மனநிம்மதி என இரண்டுக்கும் உடற்பயிற்சியானது உங்கள் உடலின் கடிகாரத்தை சீராக்க உதவுகிறது மற்றும் இரவு நேர அமைதியின்மையை குறைக்கிறது. நன்றாக தூங்கி எழும்போது நாள் முழுவதும் எந்த வித பதட்டமும் சோர்வும் இல்லாமல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக செயல்பட முடியும்.
உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல், அமைதி மற்றும் சிந்தனையை நெறிப்படுத்துகிறது. பரபரக்கும் எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது. குறிப்பாக பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கிறது. சுவாசப்பயிற்சி மென்மையான உடற்பயிற்சிகள் அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகள் கூட உங்களுக்கு மன அமைதியைத் தரும்.
மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு உடற்பயிற்சி கூட சுமையாக தோன்றலாம். பத்து நிமிட நடைப்பயிற்சி கூடப் பதட்டத்தை விடுவிக்கும். எண்ணங்களை தெளிவுபடுத்தும்.
தொலைபேசியில் பேசிக்கொண்டே நடக்கலாம். லிப்ட்டுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்தலாம்.
டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையே இடையே கை, கால்களை நீட்டி மடக்கலாம். அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லலாம்.
பிடித்த இசைக்கு நடனம் ஆடலாம்.
வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்யலாம். உடலுக்கு அசைவு கொடுக்கும் எதுவும் மனதை மகிழ்ச்சியாக்கும்.
உங்கள் மன ஆரோக்கியத்திற்கு நீங்கள் எளிமையான பயிற்சிகளை தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானது.
ஏதாவது சிறிய பயிற்சிகள் செய்தால் உங்கள் மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.