‘நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுவதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்’ என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களின் பயன்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நார்ச்சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை உண்ணுவதால், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என தெரியவந்துள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்கும், உணவுப் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனடிப்படையில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுபவர்கள், சராசரி நபர்களை விட நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக தெரியவந்துள்ளது. அதுவும் முழுமையான தானியங்களில் இருந்து கிடைக்கும் நார்ச்சத்து நம் உடலுக்கு மிகவும் பயனளிக்கிறது. இதன் மூலம் பன்மடங்கு நன்மைகள் ஏற்படுகின்றன. இரைப்பை மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு காண நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உதவுகின்றன. நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோய் குறிப்பாக, பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க முடியும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணும் போது, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிற்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகிறது. இதனால் தேவையற்ற உயிரிழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன என்கிறார்கள். நார்ச்சத்து முழுமை மற்றும் திருப்தி உணர்விற்கு பங்களிக்கிறது. ஆரோக்கியமற்ற கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும் எடையை நிர்வகிக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து இல்லாமல் நாம் உண்ணும் உணவு ஜீரணக் குழாயை கடப்பதற்கு 70 முதல் 80 மணி நேரமாகும். உணவு நம் குடலைக் கடந்து செல்லும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்னை தவிர்க்கப்படுகிறது. நாளொன்றுக்கு 40 கிராம் நார்ச்சத்து தேவை. நார்ச்சத்தில் செல்லுலோஸ், மினி செல்லுலோஸ், பெக்டின், ஸ்டார்ச், லிக்னின் போன்ற 9 வேதிப்பொருள்கள் உள்ளன.
அதிக நார்ச்சத்தை நம் உடல் பெற எளிய வழிகள்: தினமும் கைப்பிடி அளவு ஏதேனும் ஒரு கொட்டை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ( வேர்க்கடலை, பாதாம், முந்திரி, வால் நட் போன்றவை ) இவற்றை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக. பாசிப்பயறு மற்றும் பருப்பு. இது நாள்பட்ட மலச்சிக்கலை போக்கும்.
இவை தவிர, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பசலைக்கீரை, சுவீட்கார்ன், புரோக்கோலி, பச்சைப் பட்டாணி, சுண்டல், பாசிப்பயறு, கேரட், பீட்ரூட், பேரிக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, சப்ஜா விதை. அதிக நார்ச்சத்துள்ள பழங்களான வாழைப்பழம், கொய்யா, மாதுளம் பழம், ஆரஞ்சு, தக்காளி, சீதாப்பழம், விளாம்பழம், திராட்சை, பேரீச்சம் பழம், நெல்லிக்கனி என ஆய்வுகள் கூறுகின்றது. இவற்றில் ஒன்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் மன உளைச்சலால் ஏற்படும் பதற்றம், மன இறுக்கம், வயிற்று எரிச்சல் அறிகுறிகள் குறைவதாக அயர்லாந்து கோர்க் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நமது குடலில் உள்ள SCFA ( short chain fatty acids) அமிலத்தை நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உற்பத்தி செய்கிறது. இதுதான் நமது உடலிலுள்ள செல்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த அமிலம் குடலில் சுரக்கும்போது மனிதர்களின் மனபதற்றத்தையும், இறுக்கத்தையும் குறைக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.
நார்ச்சத்து சந்தேகத்திற்கு இடமின்றி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான அளவு உட்கொள்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கிறார்கள். அதை அதிகமாக உட்கொள்வது வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்துவதால் இந்த சிக்கல்கள் எழுகின்றன. மேலும், நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது உங்கள் செரிமான அமைப்பை கஷ்டப்படுத்தும் என்கிறார்கள்.