

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) தமிழ் இலக்கியம், சமயம் மற்றும் இதழியல் துறைகளில் பெரும் பங்களிப்பை ஆற்றியவர். மருத்துவம், சங்கம், நாடகம், தத்துவம் எனப் பல்துறைகளில் புலமை பெற்றவர். "தூய தமிழிலே பேச வேண்டும், எழுத வேண்டும்" என்று தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, தமிழ் வளர்ச்சிக்குப் பெரும் தொண்டு ஆற்றியவர்.
மறைமலை அடிகளின் தந்தை சொக்கநாத பிள்ளை, நாகப்பட்டினத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராக (Surgeon) பணிபுரிந்து வந்தார். இதனால் மருத்துவச் சூழல் அவருக்குப் பழகிய ஒன்றாக இருந்தது. இலக்கியம், தத்துவம் மற்றும் சமயக் கட்டுரைகள் தவிர; மருத்துவம், நாடகம் மற்றும் அரசியல் போன்ற துறைகளிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் மருத்துவம் தொடர்பான பல நூல்களைப் படித்துப் பன்முக அறிவைப் பெற்றிருந்தார். தனது அனுபவங்களைக் கொண்டு மனிதனுக்கு நோய்கள் வரும் காரணங்களைக் கண்டறிந்து கூறியுள்ளார். அவை பின்வருமாறு:
தூய காற்றும் பகலவன் ஒளியும் நன்றாக உலவாத ஒடுக்கப்பட்ட இடங்களில் நீண்ட நேரம் இருத்தல்.
காலத்திற்கேற்ப உடம்பில் தட்பவெப்பங்கள் மாறி நிற்குமாறு செய்து கொள்ளாமை.
தலை முழுகுவதற்கும், பருகுவதற்கும், புழங்குவதற்கும் சகதி நீர், சாக்கடை நீர், மலநீர், பிணநீர் முதலியன கலப்பு இல்லாததாகத் தெரிந்து பயன்படுத்தாமை.
வீடுகளில் குப்பை கூளங்களும், அழுக்கும், சகதியும், முடை நாற்றமும் மிகுந்திருக்க விடுதல்.
நச்சு நீரிலுள்ள விலங்கு, மீன், பறவைகள் முதலியவற்றின் இறைச்சிகளை விழுங்குதல்.
சைவ உணவிலும் நச்சுள்ளனவாகிய காப்பி, தேயிலை, கொக்கோ, மரப்புளி, மிளகாய் முதலியவைகளை உட்கொள்ளுதல்.
உணவுகளைக் களிம்பு, துரு முதலான நச்சுள்ள பாண்டங்களில் சமைத்தல்.
உடம்பின் நிலையறியாமல் அடுத்தடுத்துத் தண்ணீரில் தலை முழுகல்.
பல நாள் தலை முழுகாதிருத்தல்.
நாள்தோறும் தூய ஆடைகளை உடுத்தாமல், அழுக்கும் முடை நாற்றமும் உள்ள ஆடைகளை அடுத்தடுத்து உடுத்தல்.
மிகு சினம், மிகு துயரம், கவலை, மிகு திகில் அடைதல்.
உரத்த குரலில் தொடர்ந்து பேசுதல்.
13. அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது.
14. உடம்பின் அளவுக்கு மேல் ஓடுதல், குதித்தல் முதலியன செய்தல்.
15. உடம்பிற்கு வேண்டிய அளவு உடற்பயிற்சி செய்யாமை.
16. தொற்று நோய்கள் உள்ளவர்கள் பால் நெருங்கல்.
17. ஊரில் தொற்று நோய் மிகுந்துள்ள காலங்களில் முறையோடு நடவாமை.
18. ஓயாது மருந்து சாப்பிட்டு வருதல்.
19. பசியில்லாத போதும் அடுத்தடுத்து உணவுகளைத் திணித்தல்.
20. பசித்த போது உணவு உண்ணாமை.
21. உறக்கம் வருங்கால் விழித்திருத்தல்.
22. எந்நேரமும் உறங்குதல்.
23. அளவுக்கு அதிகமாகப் படித்தல், எழுதுதல்.
24. அளவுக்கு மேற்பட்ட மூளை உழைப்பு.
25. உடம்புக்கு வேண்டிய அளவு ஓய்வு கொடாமை.