

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ், ஆங்லியா ரஸ்கின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரேன் ஸ்வாமி ஒரு அற்புதமான உண்மையைத் தனது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் உலகிற்குத் தெரிவித்துள்ளார்.
பாடி இமேஜ், மனிதத் தோற்றம், ஒருவரை ஒருவர் கவரும் பாங்கு, உறவுமுறைகள் மேம்படுதல் ஆகியவற்றில் ஆய்வு நடத்தும் ஸ்வாமியை உலகம் ஆர்வத்துடனும் வியப்புடனும் பார்க்கிறது.
58 நாடுகளில் உள்ள, 36 மொழிகள் பேசும், 50363 பேர்களிடம் அவர்கள் சம்மதத்துடன் உடல் நலம், உடல் தோற்றம், உள்ள நலத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வு அவரால் நடத்தப்பட்டது.
ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் மேம்படுத்த சப்ளிமெண்ட்ஸ் எனப்படும் துணை உணவுப் பொருள்களை உண்கிறோம். இன்னும் பல நிபுணர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று அதன்படி நடக்கிறோம். அரசாங்கங்களோ வெவ்வேறு திட்டங்களை அறிவித்து ஏராளமாகப் பணம் செலவழித்து மக்களை நோயில்லாமல் வாழச் செய்ய படாத பாடு படுகிறது.
அதிகம் செலவில்லாத ஒரு வழி இயற்கைக் காட்சிகள் உள்ள இடங்களுக்குச் சென்று ஆனந்தமாக அவற்றை அனுபவிப்பது தான் என்று விரேன் ஸ்வாமி ஆதாரபூர்வமாகக் கூறுகிறார்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் ஜப்பானிய அரசின் காட்டிலாகா பிரிவு தங்கள் மக்களை காட்டிற்கு வந்து உடல்நலத்த மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்தது. இதற்கு ஷின்ரின் - யோகு (Shinrin-Yoku) அல்லது காட்டில் குளியல் என்று பெயர். மனஅழுத்தத்தைக் குறைத்து பல்வேறு நலன்களை இது தரும் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது.
பாடி இமேஜ் எனப்படும் உடல் பற்றிய வடிவ அழகு மேம்பட அனைவரும் விரும்புகின்றனர். மலேசியாவில் 87 சதவிகித மக்கள் தங்கள் உடல் அழகு பற்றி அதிருப்தியை வெளியிடுகின்றனர். இப்படி தங்கள் உருவம் பற்றிய எதிர்மறை எண்ணத்தால் அவர்களால் மனநலத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. பாலியல் உறவில் திருப்தியும் அடைவதில்லை.
இந்த தன்னிரக்க உணர்வைப் போக்க காடுகளில் இயற்கையைப் பார்த்தவாறே ஒரு நடை போடுங்கள், அல்லது கடற்கரையில் உல்லாசமாக சற்று பொழுதைக் கழியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
இப்படிச் செய்வதால் பாடி இமேஜ் பற்றிய நல்லெண்ணம் ஓங்குகிறது. ஏன் என்பதை, அட்டென்ஷன் ரெஸ்டொரேஷன் தியரி விளக்குகிறது. இயற்கையுடன் ஒன்றி இருக்கும் போது மூளை ஓய்வெடுத்து சாந்தமடைகிறது. அதிக கவனம் செலுத்த வேண்டிய தன்மை போய், ஓய்வுடன், நீரானது நீரோடையில் ஓடுவது போல மனம் சீரமைக்கப்படுகிறது. இயற்கையுடனான உறவு அதிகப்படுகிறது. அதனால் இயற்கையுடன் ஒன்றிய உணர்வு வலுப்படுகிறது.
எங்கெல்லாம் காடுகளும் காடுகளில் நீர்வீழ்ச்சிகளும் இருக்கிறதோ, எங்கெல்லாம் உல்லாசமாக உலா வர கடற்கரை இருக்கிறதோ அங்கெல்லாம் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் அல்லது தனியாகவே செந்ன்றாலும் சரி தான், ஏற்படும் நன்மைகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
இது இப்போது ஒரு பெரிய ஆராய்ச்சிப் பொருளாக மாறி மென்மேலும் பல புதுக் கருத்துகளைத் தந்து கொண்டே இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் காரணமாக விரேன் ஸ்வாமி இருந்துகொண்டு மக்களை மென்மேலும் உற்சாகப்படுத்தி இயற்கையுடன் ஒன்றிணையுங்கள் என்று கூவி அழைக்கிறார்.
சுருளி ஃபால்ஸோ, குற்றாலமோ, நயாகராவோ எங்கு போக முடியுமோ அங்கு சென்று உடல் வடிவ அழகையும் மன அழகையும் சற்றுக் கூட்டலாமே!
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference