பெரும்பாலானோர் காலையில் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் அடிக்கடி காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். சிலர் காலை உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. காலை நேரம் அலுவலகம், கல்லூரி ஆகியவற்றுக்குச் செல்லும் அவசரம். உண்ணாவிரதம் அல்லது எடை குறைப்பிற்காக சாப்பிடாமல் இருப்பது போன்ற காரணங்களால் இது இன்னும் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், பலரும் தங்கள் நாளை தினமும் உணவு சாப்பிட்டுத் தொடங்க விரும்புவதில்லை. ஆனால், காலை உணவை தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது. இப்படித் தொடர்ந்து செய்தால் பல உடல் நலக் கோளாறுகள் வரும் ஆபத்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
டிமென்ஷியா என்பது ஒரு நபரின் சிந்தனை, நினைவாற்றல் மற்றும் இயல்பான நடத்தை ஆகியவற்றை பாதிக்கும் ஒரு மனநிலை நோயாகும். இதில் மூளையின் செல்கள் சேதமடைந்து, அதன் காரணமாக சரியாக செயல்பட முடியாமல் போகும் நிலை. காலை உணவைத் தவிர்ப்பது இதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆய்வின்படி, காலை உணவைத் தவிர்ப்பது மூளையின் ஆரோக்கியத்தில் சில நீண்டகால எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. காலை உணவை உட்கொள்ளாதவர்களின் மூளை சுருங்குவதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இது டிமென்ஷியா அறிகுறிகளுடன் தொடர்புடையது. இது தவிர, இரத்தப் பரிசோதனைகளும் அவர்களுக்கு செய்யப்பட்டன. அவற்றில் சில நியூரோ டிஜெனரேஷன் பயோமார்க்ஸர்களின் அளவு காலை உணவைத் தவிர்க்காதவர்களை விட அதிகமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், டிமென்ஷியாவை தவிர்க்க காலை உணவை தவறாமல் சாப்பிடுவது அவசியம். எனினும், காலை உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
காலை உணவை தவிர்ப்பது மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது உடலில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி, கார்டிசோலின் சுரப்பை அதிகரிக்கிறது. இது காலப்போக்கில் வயிற்று கொழுப்பை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது. மேலும், காலை உணவு உட்கொள்ளாதது இரத்த சர்க்கரை குறைவிற்கும் வழிவகுக்கிறது. மூளைக்கு உணவு தேவைப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. வாரத்திற்கு 4 நாட்கள் காலை உணவை தவிர்த்தாலே அவர்களுக்கு 55 சதவீதம் டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மூளைக்கு உணவு கிடைக்காவிட்டால், அதனால் தெளிவாக சிந்திக்க முடியாது. குளுக்கோஸ் மூளையின் முதன்மை எரிபொருள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் குளறுபடிகளால் நாளடைவில் மூளை பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
இயற்கையாகவே மனிதர்களின் பசியினைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் லெப்டின் என்று அழைக்கப்படுகிறது. உரிய வேளைகளில் உணவு உண்பவர்களுக்கு இது பெரும்பாலும் இரவில் வெளியாகிறது. காலை உணவை தவிர்த்து மதியம் அல்லது இரவில் அதிகம் உண்பவர்களுக்கு லெப்டின் அதிகாலையில்தான் வெளியாவதால் காலை வேளையில் பசி ஏற்படுவதில்லை, இது நாள்தோறும் தொடர உடல் எடை அதிகரிக்குமே தவிர, குறைவதே இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிலரின் உடல் எடை அதிகரிக்க இதுவே காரணம்.
பள்ளி செல்லும் குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பது அவர்களின் கல்வியின் தரத்தை குறைப்பது இங்கிலாந்து நாட்டின் விஞ்ஞானிகள் 5000 மாணவர்களை ஆய்வுக்கு உட்படுத்தி கண்டறிந்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு தற்போது இங்கிலாந்தில் பள்ளிகளிலேயே குழந்தைகளுக்கு காலை உணவை வழங்கி வருகிறார்கள். உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? அவர்கள் காலை உணவு எடுப்பதை தவிர்க்க அனுமதிக்காதீர்கள்.