கணைய அழற்சியால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து நாள் முழுவதும் மது அருந்துவது வயிற்று வலியை ஏற்படுத்தும்.
அருகில் இருக்கும் மருத்துவரிடம் சென்று ஒரு ட்ரிப் ஏற்றிக்கொண்டு இரண்டு நாட்கள் கழித்து மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது என்று கூறுவார்கள். பெரும்பாலும் இதனை செரிமான கோளாறுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்
கணைய அலர்சியால் ஏற்படும் பிரச்சனை என்று அவர்களுக்கு தெரிவது இல்லை. அடுத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான இன்சுலின் சுரப்பு கொழுப்பு, புரதத்தை செரிமானம் செய்வதற்கான என்சைம்களை சுரப்பதும் கணையத்தின் இரு முக்கிய பணிகளாகும். ஆண்களில் மதுப்பழக்கம், பெண்களில் பித்தப்பை பித்த நீரில் கற்கள் கொழுப்பில் ட்ரை கிளிசரைட் அளவு அதிகமாக இருப்பது, பாரா தைராய்டு சுரப்பியில் இருந்து அதிக அளவு கால்சியம் சுரந்து ரத்தத்தில் கலப்பது போன்றவை கணைய அழற்சிக்கான காரணங்கள் ஆகும்.
கணையத்தில் இயல்பாக சுரக்கும் என்சைம்கள் தேவைக்கு அதிகமாக சுரந்து இரைப்பைக்குள் செல்லாமல் கணையத்தின் வெளியே கசிந்து கணையத்தை வெந்து போக செய்யும். இதுதான் ஆட்டோ டைஜஷன் எனப்படும் கணைய அழற்சி.
இதன் அறிகுறிகள் என எடுத்துக் கொண்டால் மேல் வயிற்றில் ஆரம்பித்த வலி பின் முதுகிற்கு பரவுவது போல் தீவிர வலி நிமிர்ந்து உட்கார முடியாது. முன்பக்கம் குனிந்து அமர வேண்டும். வாந்தி வரும் உணர்வு, காய்ச்சல், இதயத்துடிப்பு அதிகரிப்பது, மஞ்சள் காமாலை போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
கணைய அழற்சி மூலம் வரும் வயிற்று வலி 24 மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் செய்தாலே இதனை உறுதி செய்ய முடியும். மிதமான பாதிப்பு இருந்தால் இதனை முழுமையாக குணப்படுத்தலாம். தீவிர பாதிப்பாக இருந்தால் அவசர சிகிச்சை தேவைப்படும். இந்த நிலையில் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் என்று அனைத்து உறுப்புகளையும் இது பாதிக்கும்.
கணையத்தை சுற்றி சேர்ந்த திரவத்தில் தொற்று ஏற்பட்டு இருந்தால் ஸ்கேன் உதவியுடன் லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி உதவியுடன் நீரை வடிய வைக்க முடியும்.
அப்படியே விட்டு விட்டால் இரண்டு வாரத்தில் திரவம் அதிகமாகி வயிறு கணையத்திற்கு இடையில் கால்பந்து அளவிற்கு கட்டி உருவாகி விடும். அந்த சமயத்தில் சாப்பிடுவது மிகுந்த சிரமமாக இருக்கும். சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு, வாந்தி வரும் உணர்வு போன்றவை இருக்கும்.
முறையாக சிகிச்சை செய்தால் வெந்துபோன கணையம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடும்.
தீவிர பாதிப்பு இருப்பவர்களுக்கு 15% பேருக்கு கணைய அழற்சி மீண்டும் வரும் . நீண்டகால பாதிப்பு இருந்தால் கணைய செயல்பாடு நாளடைவில் குறைந்து நிரந்தர சர்க்கரை நோயாளிகளாக மாறுவார்கள்.
கொழுப்பு முழுமையாக ஜீரணம் ஆகாமல் மலம் எண்ணெய் பசை போல் இருக்கும். தொடர்ச்சியாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
கணையத்தில் கற்கள் உருவாகி கணையத்தின் வாயை அடைக்கும்.
இதனால் செரிமான என்சைம்கள் வயிற்றுக்கு செல்ல முடியாமல் அதீத வலியை ஏற்படுத்தும். இந்த கற்களை லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம் நீக்கலாம். பெண்களைப் பொறுத்தவரையில் குழந்தை பெற்றபின் ஹார்மோன் மாற்றங்களால் பித்தப்பை கற்கள் உருவாவது அதிகம் ஏற்படுகிறது.
எனவே மேற்கண்ட அறிகுறிகள் தெரிந்தவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.