

நாம் கண்ணாடியில் முகம் பார்க்கும்போது எதிர்பாராவிதமாக ஒரு நரைமுடி தென்பட்டாலே போதும், பலருக்கும் அதைப் பார்த்த உடன் மனஅழுத்தம் அதிகமாகி விடும். நரைமுடியை பார்த்தும் நம் வயது அதிகமாகி விட்டதே என்ற கவலை பலரையும் வாட்டுகிறது. நரைமுடியை பார்த்ததும் முதல் வேலையாக கண்ணாடி முன் நின்று, அப்படியே அந்த ஒற்றை முடியை பிடிங்கி எறிந்து விட்டு தான், நிம்மதி அடைகிறோம்.
நரைத்த முடியை பிடுங்கிய செய்தியை அக்கம் பக்கத்திலோ நண்பர்களிடமோ சொன்னால் போதும். உடனடியாக இந்த டெம்ப்ளேட் கருத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். "ஒரு தலைமுடியைப் பிடிங்கினால், அதன் பால் பட்டு அந்த முடியை சுற்றியிருக்கும் பத்து முடிகளும் நரையாக்கி விடும்" என்று பீதியை வேறு கிளப்பி விடுவார்கள். இதில் எந்த அளவிற்கு அறிவியல் உண்மை இருக்கிறது? வெள்ளை முடியை பிடுங்குவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம்.
ஒரு நரைமுடியைப் பிடுங்கினால் பத்து நரை முடிகள் தோன்றுமா (Grey hair facts)?
ஒரு நரைமுடியை பிடுங்கினால் அதை சுற்றியுள்ள முடிகளுக்கும் நரை பரவி விடும் என்பது, அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான கருத்தாகும். தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் நிறமும் அந்தந்த முடியின் வேர்கால்களில் (Hair Follicles) இருக்கும் மெலனின் அளவைப் பொறுத்து அமையும். ஒரு முடியை மட்டும் பிடுங்குவதால் அதை சுற்றியுள்ள முடிகளின் மெலனின் அளவு பாதிக்கப்படாது. நரைமுடியை பறிப்பதால் அதன் வேரிலிருந்து புதிதாக இன்னொரு நரைமுடி வளருமே தவிர அதன் அருகிலுள்ள முடியை நரையாக மாற்றாது.
மேலும், தலை முடியை பிடுங்கினால் அதன் வேர்க்கால்கள் கடுமையாக பாதிக்கப்படும். இதில் அதன் அடிப்பகுதி காயமாகி அந்த இடத்தில் முடி நிரந்தரமாக வளரமுடியாமல் கூட போகும். முடியைப் பிடுங்கும்போது ஏற்படும் சிறிய காயம், தலையில் பாக்டீரியா தொற்று மற்றும் வீக்கத்தை உண்டாக்கலாம். அந்த இடத்தில் இருந்து மீண்டும் வளரும் முடி, முன்பை விட சற்று கடினமாகவும் சீரற்றதாகவும் வளர வாய்ப்புள்ளது.
நரை முடி வருவதற்கான காரணங்கள்:
இன்றைய வேகமான உலகில், 20-30 வயதிலேயே பலருக்கும் முடி நரைக்க தொடங்கி விடுகிறது. இதில் வயது ஒரு காரணம் அல்ல. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடலில் சேரும் நச்சுகள் ஆகியவை மெலனின் செல்களை அழிக்கின்றன. உண்ணும் உணவுகளில் பி12, செம்பு மற்றும் இரும்புச்சத்து ஆகியவை போதிய அளவில் இல்லாமல் இருப்பதும் மெலனின் உற்பத்தியை பாதிக்கின்றன. இது மட்டுமல்லாமல் இது மரபணு சார்ந்ததும் கூட, உங்கள் பெற்றோருக்கு இளம் வயதில் நரை தோன்றியிருந்தால், உங்களுக்கும் இளம்வயதில் நரை தோன்றும் வாய்ப்பு அதிகம்.
இயற்கை முறையில் நரைமுடியை தடுக்க என்ன செய்யலாம்?
உங்கள் மனதில் உள்ள கவலைகள் மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது. இதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள ஸ்டெம் செல்களை பாதித்து முடியை நரைக்கச் செய்யும். மெலனின் உற்பத்தி பெரிதும் குறைய கவலையே அதிக காரணமாக உள்ளது. மனஅழுத்தம் குறைய ஆழ்ந்த தூக்கம் தான் மிகவும் சரியான தீர்வு. இத்துடன் தினசரி யோகா போன்ற மன அழுத்தம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும்.
பாதம், முந்திரி, வேர் கடலை, கருவேப்பிலை, மீன், முட்டை, ஒமேகா கொழுப்பு நிறைந்த உணவுகள், பருப்புகள், தானியங்கள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் . நரை முடியை பிடுங்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதைப் பிடுங்குவதற்கு பதிலாக, அதை வேருக்கு அருகில் நறுக்கி விடுங்கள். இது வேர்க்கால்களை பாதிக்காது.