
நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நம்முடைய உணவுமுறை சரியாக இருக்க வேண்டும். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மட்டுமில்லாமல் அதை சரியான வேளையில் சாப்பிடவும் வேண்டும். காலையில் கட்டாயம் உணவு எடுத்துக் கொள்வதுடன் இரவுநேரத்தில் உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்தாமல் முன் கூட்டியே சாப்பிடுவதால் சில நன்மைகள் கிடைக்கும்.
மூன்று வேளையும் நாம் உணவை எடுத்துக் கொண்டாலும் காலை உணவு முதல் இரவு உணவு வரை சாப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அந்த நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும்.
காலையில் சூரிய உதயத்திற்குப் பிறகும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உணவு உண்பது சிறந்தது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அந்த நேரத்தில் உட்கொள்ளும் உணவு உடலுக்கு நன்மை தருகிறது. காலையில் எழுந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டும் காலை உணவை சாப்பிட 8-9 மணி வரை சிறந்த நேரம். அது போல மதிய உணவை சாப்பிட, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஏற்ற நேரமாகும். இரவு உணவை 7 மணிக்கு சாப்பிடுவது தான் சிறந்தது. அதிக பட்சம் 8 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் விரைவில் செரிமானம் ஆகும்.
எடை இழப்பு:
இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உணவு செரிமானம் அடைய கடினமாகிறது. இது வயிற்று வலி, வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால் சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் இடையில் உள்ள நேரத்தில் செரிமானம் விரைவாக நடக்கும். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உணவு எளிதில் செரிமானமாகி இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் கொழுப்பின் அளவு குறைவாகவே இரத்தத்தில் கலக்கும். இதனால் உடல் எடை குறையும்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்:
நீரிழிவு நோயாளிகளுக்கு தாமதமாக சாப்பிடுவது நல்லதல்ல. சரியான நேரத்தில் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் அவசியம். இவர்கள் சீக்கிரம் உணவை சாப்பிட்டு சிறிது நடைப்பயிற்சியும் செய்தால், உடலில் குளுக்கோஸ் உற்பத்தி செய்ய நேரம் கிடைக்கும். அதிக நேரம் கிடைப்பதால் குளுக்கோஸ் அளவு உற்பத்தி ஆகி விரைவில் குறையவும் ஆரம்பிக்கும். இது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இதய நலன்:
விரைவாக சாப்பிடுவதால் செரிமானம் அடைந்து, வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும். இந்த செரிமான கோளாறுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது. செரிமானம் விரைவாக நடந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதயமும் நலமாக இருக்கும்.
நல்ல தூக்கம்:
இரவில் சீக்கிரமாக சாப்பிடுவதால், விரைவாக செரிமானம் ஆகி, வேறு தொந்தரவுகள் வராமல், மற்ற உறுப்புகள் முன் கூட்டியே செயல்பட்டு தன் பணிகள் அனைத்தையும் முடித்து விடுகிறது. இதனால் உடல் உறுப்புகள் தங்கள் ஓய்வு நேரத்தை விரைவாகவே தொடங்குகின்றன. இதனால் நல்ல தூக்கம் வருகிறது.