
உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றில் எது ஒன்று அதிகமானாலும் உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக பித்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் ஜீரண மண்டலத்தை முறையாக செயல்பட உதவும் பித்தத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை சீராக இருந்தால்தான் நோய் எதிர்ப்பு மண்டலமும், ஜீரண மண்டலமும் சிறப்பாக செயல்படும். அதற்கு நம்முடைய உணவு முறையில் கவனம் தேவை.
பித்தம் என்பது என்ன? :
பித்தம் என்பது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு திரவமாகும். இது நாம் உண்ணும் உணவிலிருந்து உடல் கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது. கல்லீரலில் சுரக்கின்ற இந்த மஞ்சள் நிற நீர் செரிமானத்திற்கு இன்றிமையாத பணியை செய்கிறது. இதன் சுரப்பு சீராக இருக்கும் போது உடல் ஆரோக்கியமுடன் இருக்கும்.
பித்தம் அதிகரிக்க காரணங்கள்:
உடல் சூட்டை அதிகரிக்கும் ஜங்க் மற்றும் துரித உணவுகள், தூக்கமின்மை, காபி, டீ அதிகம் எடுத்துக் கொள்வது, போதை பொருட்களின் பயன்பாடு ஆகியவை பித்த நீர் சுரப்பு அதிகரிக்க காரணங்கள் ஆகின்றன.
பித்தம் அதிகமாவதன் அறிகுறிகள்:
உடலில் பித்தம் அதிகமாகும் பொழுது அஜீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல், சருமத்தில் அரிப்பு, அதிகப்படியான தாகம் போன்றவை ஏற்படும். பசி எடுக்காது. வாய் கசப்பாக இருக்கும். தலை சுற்றல், பாத எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
பித்தத்தை குறைக்க என்ன செய்யலாம்?
இதற்கு எல்லா ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீர் உணவு அவசியம். கசப்பு தன்மை கொண்ட உணவுகளையும், இனிப்பு உணவுகளையும் எடுத்துக் கொள்வது உடலின் பித்தத்தின் அளவை குறைக்கும். வெள்ளரிக்காய், பீன்ஸ், தேங்காய், தர்பூசணி, ஆப்பிள், திராட்சை, பால் போன்ற உணவுகள் நம் உடலின் பித்த நிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவும். கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு, வெந்தயம், சோம்பு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை:
வறுத்த உணவுகள், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள், மசாலா அதிகம் சேர்த்த உணவுகள், நொறுக்கு தீனிகள், உப்பு காரம் புளிப்பு சுவை அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் காப்பி, இறைச்சி ஆகியவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
தீர்வுகள்:
வீட்டு வைத்தியங்கள்:
* பித்தத்தை குறைப்பதில் இஞ்சிக்கு பெரும் பங்குண்டு. இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வரலாம்.
* சுக்குப்பொடி , நெல்லிக்காய் பொடி, சீரகப்பொடி மூன்றையும் சம அளவில் எடுத்து கலந்து வைத்துக் கொண்டு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியைக் கலந்து பருகி வர, பித்தம் குணமாகும்.
* எலுமிச்சம் பழம், ஆரஞ்சு பழம் ஆகியவற்றின் சாறை (ஜூஸ்) எடுத்துக் கொள்ளலாம். மோரில் எலுமிச்சை இலைகளை கையால் கசக்கி சேர்த்து சிறிது உப்பு கலந்து பருகலாம்.
* உடலுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில் நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். எனவே தினமும் போதிய அளவு தண்ணீரை குடிப்பது அவசியம்.
* அதிக உடல் உழைப்பை குறைத்துக் கொள்வதும், மனதை அமைதி படுத்தவும் தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். யோகா மற்றும் புஜங்காசனம் போன்ற ஆசனங்களை செய்து வர பித்தம் சமநிலையில் இருக்கும்.