நம்முடைய மனம் அமைதி பெறவும், நினைத்த காரியங்கள் வெற்றி பெறவும் வாழ்வில் ஆரோக்கியமாக வாழ நாம் அன்றாடம் தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்தினால் நிறைவேறும். தியானம் என்பது மனது அதன் மேலேயே திருப்பப்படுதல். மனது எல்லா எண்ண அலைகளையும் நிறுத்தும்போது வெளியுலகத்திலிருந்து வரும் தூண்டுதல்கள் மனத்தின் மீது அதிகாரம் செலுத்த முடியாது. உங்கள் உணர்வு விரிகின்றது.
தியானம் செய்கிற போதெல்லாம் உங்கள் மனத்தின் ஆற்றல் பெருகுகின்றது. அப்பொழுது உடலைப் பற்றியோ மற்ற பொருட்களைப் பற்றியோ நீங்கள் உணர்வதில்லை. ஒரு மணி நேரம் தியானம் தொடர்ந்து செய்தால் உங்கள் வாழ்க்கையிலே நிம்மதியான ஓய்வைப் பெற்றதாக உணர்வீர்கள். உடலுக்கும் உள்ளத்திற்கும் பூரண ஓய்வு கொடுப்பது தியானமே. ஆழ்ந்த உறக்கம் கூட அவ்வகையான ஓய்வை கொடுப்பதில்லை.
தியானத்தின்போது மூளை ஓய்வு பெறுகின்றது. ஆனால், உறக்கத்தில் மனது ஓய்வு பெறாமல் குதித்துக் கொண்டு இருக்கிறது. தியானத்தின் போது உங்கள் உடல் இருப்பதைக் கூட மறந்து விடுகிறீர்கள். அப்போது, உங்களைப் பல துண்டுகளாக வெட்டினாலும் நீங்கள் உணர மாட்டீர்கள். நீங்கள் எடை குறைந்து இலேசாக இருப்பது போல் உணர்வீர்கள். தியானத்தினால் கிடைக்கும் பூரண ஓய்வு இதுதான்.
யோகாசனம் என்பது அதிகம் உடலை வளைத்து செய்வதல்ல. முதலில் மூச்சுப்பயிற்சி. மூச்சுப்பயிற்சி என்பது நம் வலது கையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரல் கொண்டு மூக்கின் இடப்புறமாக சுவாசத்தை இழுத்து வலப்புறமாக விட்டு, பின் வலப்புறமாக சுவாசத்தை இழுத்து இடப்புறமாக விட வேண்டும். பிறகு அமைதியான இடம், அது உங்கள் வீட்டு பூஜை அறையாக இருந்தாலும் சரி எந்த விதமான சப்தமும் இல்லாத இடமாக பார்த்து அமர்ந்துகொள்ள வேண்டும். பின்பு கண்களை மெதுவாக மூடி உங்களுக்குப் பிடித்த கடவுளின் பெயரோ அல்லது விளக்கின் ஒளியோ அதை உங்கள் நெற்றியின் மையத்தில் நிலைநிறுத்தவும்.
முதலில் உங்கள் மனம் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவிற்கு தாவிக் கொண்டேயிருக்கும். அடுத்தடுத்த நாட்களில் மனம் மெதுவாக ஒன்றுபடும். மனம் அமைதியடையும். அப்போது உங்கள் மனம் அடையும் ஆனந்தத்தை வார்த்தைகளில் சொல்ல முடியாது. யோகாவில் முதலில் மனம் அலைபாயும். அப்படி அலையும் மனதை எட்டி நின்று கவனியுங்கள். மனதை அதன் போக்கில் அலைய விடுங்கள். நாட்கள் செல்லச்செல்ல மனம் உங்கள் வசமாகும். தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது யோகாவில் அமர வேண்டும். ஆசனத்தில் உட்கார்ந்து, மனத்தை அதன் வழியே செல்லவிட்டு பொறுத்திருந்து கவனிக்கவும்.
‘அறிவே ஆற்றல்’ என்று கூறுகிறது ஒரு முதுமொழி. மனது என்ன செய்கிறது என்று தெரிந்தாலன்றி அதனை அடக்க இயலாது. அதன் கடிவாளத்தைத் தளர்த்தி விடுக. கொடிய எண்ணங்கள் மனத்தினில் எழுந்திடும். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தினில் இருப்பதைக் கண்டு நீங்களே வியப்புறுவீர்கள். நாட்கள் செல்லச் செல்ல, மனத்தில் சீரற்ற எண்ண அலைகள் குறைந்துகொண்டே வந்து, மனமும் சிறிது சிறிதாக அமைதி பெறுவதைக் காணலாம். வீண் வாதங்களையும் மனத்தைச் சிதறச் செய்யும் பேச்சுக்களையும் அச்சமயம் தவிர்க்கவும்.