தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே!

தூங்கும் பெண்
தூங்கும் பெண்
Published on

தூங்குவதென்றால் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கிறது. படுத்ததும் தூக்கம் வர வேண்டும். அப்படி வந்தால் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம் என்று அர்த்தம். இரவு தூங்கிய பின்னர் காலை எழுந்திருக்கிறோம். இடையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நாம் கவலைப்பட்டதில்லை. ஆனால், தூக்கத்தில் நம் உடலில் பலவித விஷயங்கள் நடைபெறுகின்றன. தூக்கத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

நமது வாழ்நாளில் நாம் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் செலவழிக்கிறோம். நம்முடைய வாழ்நாளில் சுமார் ஆறு வருடங்கள் கனவு காண செலவழிக்கிறோம். நாம் நமது தினசரி தூக்கத்தில் சுமார் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரம் வரை கனவு காண்கிறோம். இவையெல்லாம் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிய வரும் உண்மைகளாகும்.

தூங்கும்போது என்ன நிகழ்கிறது? நாம் தூங்கும்போது கூட நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. நாம் தூங்கும் வேளையில் நமது மூளையானது ஒரு தூக்க சுழற்சியில் ஐந்து நிலைகளைக் கடக்கிறது. இந்த ஐந்து நிலைகளானது முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் கடைசி நிலையான ரெம் நிலை (REM Stage) என்ற ஐந்து நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இந்த ஐந்து நிலைகளும் சேர்த்து ஒரு தூக்க சுழற்சி (Sleep Cycle) என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தூக்க நிலையும் சுமார் இருபது நிமிடங்கள் நீடிக்கின்றன. இருபது நிமிடம் முடிந்ததும் அடுத்த தூக்க நிலை ஆரம்பிக்கிறது. இப்படியே சுமார் 100 நிமிடங்கள் முடிந்ததும் ஒரு தூக்கச் சுற்று முடிவடைந்து அடுத்தத் தூக்கச் சுற்று ஆரம்பிக்கிறது.

தூக்க சுழற்சியானது இரண்டு நிலைகளாகப் பிரித்து அறியப்படுகிறது. முதல் நிலை நான் ரெம் நிலை (Non REM Stage) எனவும் அடுத்த நிலை ரெம் நிலை (REM Stage)  எனவும் அழைக்கப்படுகிறது. முதல் நிலையிலிருந்து நான்காம் நிலை வரை உள்ள தூக்க சுழற்சிநான் ரெம் நிலை எனப்படுகிறது. ஐந்தாவது நிலை தூக்கமானது ரெம் நிலை என அழைக்கப்படுகிறது.

இனி, ஒரு தூக்க சுழற்சியில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பதைப் பற்றி பார்ப்போம். முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை ஆகிய இரண்டு வகை தூக்கங்களும் மிகவும் மேலோட்டமான தூக்கமாகும். இந்த நிலைகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை குரல் கொடுத்தே எழுப்பி விடலாம். இந்தத் தூக்க நிலைகளில் கண்களின் அசைவானது மிகக்குறைந்த அளவிலேயே இருக்கிறது. முதல் நிலை தூக்கத்தில் நமது கண்கள் முன்னும் பின்னும் நகர்கின்றன. இதயத் துடிப்பும் சுவாசமும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. உடல் வெப்பநிலையின் அளவும் குறையும்.

இதையும் படியுங்கள்:
கணவன், மனைவி சண்டையை சமாதானத்துக்குக் கொண்டுவரும் எளிய 5 ஆலோசனைகள்!
தூங்கும் பெண்

இரண்டாவது நிலை தூக்கத்திற்குள் நுழையும்போது நமது தசைகள் ஓய்வெடுக்க ஆரம்பிக்கின்றன. நமது இதயத்துடிப்பும் சற்று குறைய ஆரம்பிக்கும். இந்த நிலையில் நமது உடலானது ஆழ்ந்த தூக்கத்தை நோக்கி, அதாவது மூன்றாம் நிலை தூக்கத்தை நோக்கிச் செல்லத் தயாராகும். மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை தூக்கங்கள் சற்று ஆழ்ந்த வகை தூக்கங்களாகும். இந்த நிலைகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவது கடினமாக இருக்கும். மிகவும் சிரமப்பட்டுதான் இந்த நிலையில் தூங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்ப இயலும். குறட்டை போன்ற விஷயங்கள் இந்த முதல் நான்கு நிலை தூக்கத்திலேயே நிகழ்கின்றன. முதல் நான்கு நிலைத் தூக்கங்களும் நான் ரெம் (Non-rapid eye movements (Non REM) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது.

ஐந்தாவது நிலை, அதாவது கடைசி நிலை தூக்கமான ரெம் (Rapid Eye Movements - REM) நிலை தூக்கமானது மிகவும் ஆழ்ந்த வகை தூக்கமாகும்.  இந்த நிலையில் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் இதயம் மிக வேகமாகத் துடிக்கும். சுவாசமும் மிக வேகமாக இருக்கும். மூடிய இமைக்குள் கண்கள் மிக வேகமாக முன்னும் பின்னும் நகர்ந்த வண்ணம் இருக்கும். வண்ணமயமான கனவுகளும் பளிச்சென்ற கனவுகளும் இந்த நிலை தூக்கத்தில் இருக்கும்போதே ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com