

இப்பொழுதெல்லாம், வீட்டில் பலகாரங்கள் செய்வது என்பது குறைந்து கொண்டே வருகிறது. நவீன வாழ்க்கை முறை, நேரமின்மை மற்றும் கடைகளில் எளிதாக கிடைக்கும் வசதி போன்றவற்றால் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்துவிட்டது. பெரியவர்கள் செய்த சுவையை மீண்டும் கொண்டு வருவதில் உள்ள சிரமம், உடல் உழைப்பு மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் செய்யும் வழக்கம் போன்றவை பலகாரங்கள் வீட்டில் செய்யப்படாததற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
வீட்டு பலகாரங்கள் ஆரோக்கியம், தரம் மற்றும் பாசத்தின் அடையாளமாகத் திகழ்கின்றன. கடைப் பலகாரங்கள் நேர சேமிப்புக்கு ஏற்றவை.
வீட்டு பலகாரங்களில் சுத்தமான நெய்/எண்ணெய், புதிய பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் உடலுக்கு நல்லது. கடைகளில் தரக் கட்டுப்பாடு மாறுபடலாம்.
என்னதான் அருமையான ஸ்வீட்டாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை முதலில் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்று உப்புசம், வாயு தொல்லை போன்றவை ஏற்படும். பசி இருக்காது.
வீட்டில் செய்த இனிப்புகள் ஒன்றிரண்டு கூட போனால் வயிற்றுக்கு ஒன்றும் ஆகாது. அதுவே கடை பலகாரங்கள் அதிகமானால் நம் உடல் ஏற்றுக் கொள்ளாது. பசியை அடைத்து விடும்; வயிற்று சங்கடங்கள் ஏற்படும்.
பெரியவர்கள் இனிப்புகளையும், எண்ணைப் பலகாரங்களையும் குறைந்த அளவு, ரொம்பவே அளந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வயிற்றை பதம் பார்த்துவிடும்.
கடைகளில் வாங்குவதில் தப்பில்லை. ஆனால் நல்ல கடைகளாக பார்த்து வாங்க வேண்டும். கடைகளில் வாங்கும் இனிப்புகளில் பொதுவாக அதிக சர்க்கரையும், எண்ணெய், நெய் போன்ற கொழுப்பு சமாச்சாரங்களும் அதிகமிருக்கும். சில சமயம் பெரிய கடைகளில் கூட சமையல் சோடாவும், மைதாவும், வண்ண வண்ண செயற்கை நிறங்களும் சேர்த்து செய்வதால் கவனம் தேவை.
உக்காரை, அதிரசம், பாரம்பரியமாக செய்யப்படும் லட்டு வகைகள் - பூந்தி லட்டு, ரவா லட்டு, டிரை ஃப்ரூட்ஸ் லட்டு, பொட்டுக்கடலை கொண்டு செய்யப்படும் மாலாடு மற்றும் முந்திரி கொத்து போன்றவை ஆரோக்கியத்துடன் வயிற்றுக்கும் பாதுகாப்பான இனிப்பாகும்.
வீட்டு பலகாரங்களுக்கு நீண்ட நேர உழைப்பு தேவை. கடைகளில் வாங்குவது நேரத்தை மிச்சப்படுத்துகிறது, குறிப்பாக பண்டிகைக் காலங்களில்.
வீட்டுப் பலகாரங்கள் செய்வதற்கு அதிக நேரம் மற்றும் உழைப்பு தேவைப்படலாம். ஆனால் சுவை மற்றும் சுகாதாரத்திற்கு சிறந்தவை. அத்துடன் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்றபடி செய்யலாம். ஆரோக்கியமான மற்றும் விருப்பமான பொருட்களைப் பயன்படுத்தி சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் செய்யப்படுகிறது.
கடைப் பலகாரங்கள் வசதியானவை, பலவகையான விருப்பங்களை தேர்ந்தெடுக்கலாம். எந்த உடல் உழைப்பும் இன்றி உடனடியாக கிடைக்கின்றன. ஆனால் விலை அதிகமாக இருக்கும் மற்றும் சுகாதார தரமும் மாறுபடலாம். மறைக்கப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
வீட்டுப் பலகாரங்கள் பொருட்கள் வாங்கும் விலையைப் பொறுத்து மாறுபடும். கடைப்பலகாரங்கள் குறிப்பாக பிராண்டட் கடைகளில் வாங்கப்படும் பலகாரங்கள் விலை அதிகமாக இருக்கலாம்.
கடையில் பலகாரங்கள் வாங்கும் போது எக்ஸ்பயரி டேட் (காலாவதி தேதி) பார்த்து வாங்க வேண்டும். வீட்டில் செய்யும் பலகாரங்களில் அந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒரு வாரம், பத்து நாட்கள் வைத்திருந்து சாப்பிடக் கூடிய வகையில் தான் சத்தான பலகாரங்களை வீட்டில் செய்வார்கள்.
மைதாவில் செய்தது, கலர் கலராக கண்ணைக் கவரும் இனிப்புகள், அதிக நெய் சேர்த்து செய்த பலகாரங்கள் ஆகியவற்றை வாங்காமல் இருப்பது நல்லது. தரத்துடன் பாரம்பரியமும் நிறைந்த சோமாஸ், பொருள் விளங்கா உருண்டை, கை முறுக்கு, எள்ளடை போன்றவை ஆரோக்கியத்துடன் ருசிக்கவும் செய்யும்.
வீட்டு பலகாரங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைமணம் மற்றும் பாசத்தை உணர்த்துகின்றன.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஆரோக்கியம் மற்றும் தரம் முக்கியம் என்றால் வீட்டு பலகாரங்கள் சிறந்தவை. அதே சமயம் சுவை மற்றும் நேர சேமிப்பு முக்கியம் என்றால் கடைப்பலகாரங்கள் சிறப்பானவை.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference