Retail Investors  
பொருளாதாரம்

சில்லறை முதலீட்டாளர்களே - உங்களுக்கான 5 டிப்ஸ் இதோ!

ரா.வ.பாலகிருஷ்ணன்

நீண்ட கால முதலீடு தான் நமக்கு பலன்களை அள்ளித் தரும். இருப்பினும், பங்குச்சந்தையில் சில்லறை முதலீட்டாளர்கள் ஒருசில காரணங்களுக்காக பாதியிலேயே பங்குகளை விற்று, முதலீட்டை கைவிடுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.

குறுகிய காலத்தில் அதிக இலாபம் சம்பாதிக்க பங்குச்சந்தை தான் ஒரே வழி என்பது பலருடைய கருத்தாகும். பங்குச்சந்தை முதலீட்டை பொறுத்தவரை ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி வருவதால், தொடர்ந்து கண்காணித்து வர வேண்டியது அவசியமாகும். இங்கு தான் சில்லறை முதலீட்டாளர்கள் தடுமாறுகின்றனர். இதன் காரணமாக தங்களது பங்குகளை வெகு விரைவிலேயே விற்று விடுகின்றனர். ஆனால் பங்குச்சந்தையைப் பொறுத்தவரை நீண்ட கால முதலீடு தான் இலாபத்தைத் தரும்.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி, சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவில் பொது பங்கு வெளியீட்டில் பங்குகளைப் பெறும் 50% சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்கள் பங்குகளை விற்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 70% சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு வருடத்திற்குள்ளேயே தங்கள் பங்குகளை விற்கின்றனர். நீண்ட கால முதலீடு தான் சிறந்தது என்ற போக்கிற்கு இது எதிராக அமைகிறது. இந்நிலையில் சில்லறை முதலீட்டாளர்கள் நிதி இலக்கை அடைய உதவும் சில முதலீட்டு வழிகளை அறிந்து கொள்வது அவசியம்.

ஏற்ற இறக்கம்:

சந்தையில் எப்போதும் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதை முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டும். சில்லறை முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கத்தைக் கண்டு பயம் கொள்ளாமல், வாங்கிய பங்குகளின் அடிப்படையில் முதலீட்டைத் தொடர்வது நல்லது.

மறு முதலீடு:

தொடக்கத்தில் ஒரு முதலீடு அளிக்கும் பலனை விட, பிந்தைய காலங்களில் அளிக்கும் பலன் தான் அதிகம். ஆகையால் தொடர்ந்து முதலீடு செய்வதும், முதலீடு முதிர்ச்சி அடைந்து பின் மறு முதலீடு செய்வதும் நமக்கான இலாபத்தை அதிகரிக்க உதவும்.

சீரான முதலீடு:

சந்தையின் ஏற்ற இறக்கம் உங்கள் முதலீட்டை பாதிக்கும் என நினைத்தால், அதனை எதிர்கொள்ள சிறந்த வழி எஸ்.ஐ.பி எனும் சீரான முதலீட்டு முறை தான். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பெரும்பாலும் நீண்ட கால அணுகுமுறையில் செயல்படுகின்றன என செபியின் ஆய்வறிக்கை கூறுகிறது.

நீண்ட காலம்:

பங்கு முதலீட்டின் அடிப்படை நோக்கமே நீண்ட கால முதலீடு தான். முதலீட்டுத் தொகுப்பை உருவாக்கும் நேரத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். இளம் வயதில் முதலீடு செய்யும் போது, முதலீட்டு விகிதம் அதிகமாக இருக்கலாம்; வயதாக ஆக இதனைக் குறைத்தும் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது.

சந்தை விலை:

சந்தையில் பங்குகளின் விலை ஒரே மாதிரியாக இருக்காது. இதனைக் கண்டு நாம் அஞ்சிடாமல், யாரோ ஒருவர் பங்குகளின் விலையை நிர்ணயம் செய்கிறார்; அதனால் நமக்கென்ன என்று கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் நமது பங்கை விற்று விடலாம் என்ற எண்ணம் தோன்றி விடும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT