ATM Machine... 
பொருளாதாரம்

ஏடிஎம் திருட்டு – பணத்தைப் பாதுகாக்க பத்து வழிகள்!

ஆர்.வி.பதி

டிஎம் அட்டைப் பாதுகாப்பு பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் தினம் தினம் பலர் தங்களின் பணத்தை இழந்து தவிக்கிறார்கள். இதனால் எழும் மனஉளைச்சல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏடிஎம் அட்டையினை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1. ஏடிஎம் அட்டையினை உபயோகித்து பணம் எடுப்பது மிகவும் சுலபமான செயலாகும். அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் மூன்றாம் நபரின் உதவியோடு உங்கள் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்காதீர்கள். மூன்றாம் நபர் கெட்டவராக இருந்தால் உங்கள் பணத்தை சுலபமாக அபகரி்த்து விடுவார். உங்களுக்கு உபயோகிக்கத் தெரியவில்லை என்றால் உங்கள் மகன், மகள் மூலமாக பணத்தை எடுங்கள்.

2. வங்கியிலிருந்து எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுக்கு தொலைபேசி மூலமாக எந்த விவரங்களையும் கேட்கவே மாட்டார்கள். அப்படி யாராவது உங்களுக்கு போன் செய்து உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் அட்டை எண், ரகசிய குறியீட்டு எண் (PIN) போன்றவற்றைக் கேட்டால் யோசிக்காமல் அந்த தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.

3. அடிக்கடி நீங்கள் ஏடிஎம் அட்டை மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவராக இருந்தால் உங்கள் சம்பள வங்கிக் கணக்கின் ஏடிஎம் அட்டையினை பயன்படுத்தாதீர்கள். இதற்காக பிரத்யேகமாக ஒரு வங்கிக்கணக்கினைத் துவக்கி ஏடிஎம் அட்டையினைப் பெற்று அதில் ஐந்தாயிரம் ரூபாய் மட்டும் போட்டு வைத்து அந்த அட்டையினை பயன்படுத்துங்கள். ஒரு வேளை யாரேனும் உங்கள் பணத்தை அபகரித்தால் இழப்பு குறைந்த தொகையோடு போய்விடும்.

4. வங்கியில் ஏடிஎம் அட்டையினை குறுஞ்செய்தி மூலம் எப்படி பிளாக் செய்வது என்பது குறித்த வாசகங்களை ஒட்டியிருப்பார்கள். அதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஆபத்து சமயங்களில் உங்கள் ஏடிஎம் அட்டையினை பிளாக் செய்துவிட்டால் சொற்ப இழப்போடு ஏடிஎம் திருட்டினைத் தவிர்த்து விடலாம்.

5. சுலபமாக தெரிந்து கொள்ளக்கூடிய எண்களை இரகசிய குறியீட்டு எண்களாக வைக்காதீர்கள். உதாரணமாக சிலர் தங்களின் பிறந்த வருடத்தை இரகசிய குறியீட்டு எண்ணாக வைத்திருப்பார்கள். மற்றும் சிலர் 1234 என சுலபமான எண்களை இரகசிய குறியீட்டு எண்களாக பயன்படுத்துகிறார்கள். யாரும் ஊகிக்க முடியாத அளவிற்கு இரகசிய எண்களை முடிவு செய்து பயன்படுத்துங்கள்.

6. அடிக்கடி உங்கள் மொபைலில் குறுஞ்செய்திகளைப் பார்க்கும் வழக்கத்தை கடைபிடியுங்கள். உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் யாரேனும் பணத்தை எடுத்தால் இதன் மூலம் உடனடியாகத் தெரிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

7. மாதத்திற்கு ஒரு முறை ரகசிய குறியீட்டு எண்ணை (PIN) மாற்றும் வழக்கத்தை கடைபிடியுங்கள். ஏடிஎம் திருட்டிலிருந்து உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ள இது ஒரு முக்கியமான வழியாகும்.

8. சிலர் தங்களுடைய மறதியின் காரணமாக ஏடிஎம் கார்டின் பின்புறத்தில் ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைக்கும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும்.

9. வங்கியோடு இணைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் மட்டுமே பணத்தை எடுக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். தவிர்க்க இயலாத பட்சத்தில் வேறு ஏடிஎம் மையங்களை பயன்படுத்துங்கள்.

10. ஏடிஎம் குற்றங்கள் பொதுவாக இரவு பத்து மணி முதல் அதிகாலை நான்கு மணி வரை நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே இத்தகைய நேரங்களில் ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுப்பதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT