Kisan Vikas Patra Post office investment 
பொருளாதாரம்

சம்பாதிக்க தொடங்கியாச்சா? சேமிக்க தொடங்குங்கள்... அஞ்சல் துறை முதலீடு 100% பாதுகாப்பானது!

ஆர்.வி.பதி

இந்திய அஞ்சல் துறையில் முதலீடு செய்வதற்கான ஏராளமான திட்டங்கள் உள்ளன. அஞ்சல் துறை முதலீடு என்பது நூறு சதவிகிதம் பாதுகாப்பானது.  நீங்கள் நூறு ரூபாயில் (RD) இருந்து முப்பது லட்சம் ரூபாய் (SCSS) வரை முதலீடு செய்யலாம்.   

அஞ்சல் துறையில் உள்ள ஒரு சிறப்பான முதலீட்டுத் திட்டம் கே.வி.பி என சுருக்கமாக அழைக்கப்படும் கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra). இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். ஒன்பது வருடங்கள் ஏழு மாதங்கள் கழித்து அதாவது 115 மாதங்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாயாக உங்களுக்குத் திருப்பித்தரப்படும் என்பது இதன் சிறப்பம்சமாகும். 7.5 சதவிகிதம் கூட்டு வட்டியாக கணக்கிடப்பட்டு தரப்படுகிறது. முதிர்வடையும் போது கிடைக்கும் வட்டித் தொகையானது வரிக்கு உட்பட்டது.

கிஸான் விகாஸ் பத்திரத்தில் தொடர்ந்து மாதம் ஒரு தொகையை 115 மாதங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக மாதா மாதம் 2000 ரூபாயை 115 மாதங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் 116 வது மாதத்திலிருந்து தொடர்ந்து 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் 4000 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இப்படிக் கிடைக்கும் தொகையை மீண்டும் இதே திட்டத்தில் 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு முதலீடு செய்து வந்தால் அடுத்த 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு மாதாமாதம் 8000 ரூபாயைப் பெறலாம்.  இப்படிக் கிடைக்கும் தொகையை மீண்டும் 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு மூதலீடு செய்து வந்தால் அடுத்த 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு மாதாமாதம் 16000 ரூபாயைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் முப்பத்தியோராவது வயதில் இதை நீங்கள் தொடங்கி மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்து அதை மீண்டும் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மறு முதலீடு செய்து வந்தால் 61 வது வயதிலிருந்து 70 வது வயது வரை மாதாமாதம் 16000 ரூபாயைப் பெற்றுக் கொள்ளலாம்.

நீங்கள் 9 வருடங்கள் 7 மாதங்கள் செய்யும் மூதலீட்டுத் தொகை 2,30,000.00 ரூபாய். இந்த தொகையை நீங்கள் சிரமம் பாராமல் ஒவ்வொரு மாதமும் அரைமணி நேரம் செலவழித்து மறுமுதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து கிடைக்கு முதிர்வு தொகையை மீண்டும் இரண்டு முறை 9 வருடங்கள் 7 மாதங்கள் மறுமுதலீடு செய்தால் எழுபதாவது வயது முடியும் போது நீங்கள் பெற்ற மொத்த தொகை 18,40,000.00 ஆகும். இதில் 2000 என்பது உதாரணத்திற்காக குறிப்பிடப்பட்ட தொகை. உங்கள் வசதிக்கேற்ப கூடுதலாகவும் குறைவாகவும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.  இது உங்கள் விருப்பம்.

முதல் முறை முதலீடு செய்யும் போது கூடவே 500 ரூபாய் செலுத்தி ஒரு தபால் நிலைய சேமிப்புக் கணக்கினைத் (POSB) துவக்க வேண்டும்.  அந்த பாஸ் புத்தகத்தில் CIF எண் ஒன்றை குறிப்பிட்டிருப்பார்கள். இந்த CIF எண்ணை கே.வி.பி.முதலீடு விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும். ஒவ்வொரு முறை கே.வி.பி. வாங்கும் போதும் நீங்கள் ஆதார் மற்றும் பான் எண் நகலை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பதும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

தற்காலத்தில் பென்ஷன் திட்டம் என்பது இல்லை. எனவே நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் அதாவது அறுபது வயதுக்கு மேல் மாதாமாதம் ஒரு தொகையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முப்பத்தியோராவது வயதில் நீங்கள் செய்யும் இந்த முதலீட்டுத் தொகையானது முதிர்வடைந்து அறுபத்தியோராவது வயதிலிருந்து மாதாமாதம் பெறும் போது அந்த பணத்திற்கு அவ்வளவு பெரிய மதிப்பிருக்காது என்று உங்கள் 'நலம்விரும்பிகள்' சொல்லுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள்.  நீங்கள் மாதாமாதம் முதலீடு செய்வது சிறிய தொகை. அது மட்டுமில்லாமல் நீங்கள் அரசு திட்டத்தில் முதலீடு செய்வதால் உங்கள் பணம் நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும்.  

அஞ்சலகத்திற்குப் புறப்படுங்கள். சிறிய தொகையை மாதாமாதம் முதலீடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்திற்கு இப்போதே அடித்தளமிடுங்கள். நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் எதிர்காலத்தில் பெரிய உதவியாக நிச்சயம் திரும்பக் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT