Rashmika Mandhana 
வெள்ளித்திரை

திரைக்கு வரக் காத்திருக்கும் ராஷ்மிகாவின் 2 படங்கள்: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் இரண்டு படங்கள் ஒரே தேதியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.‌

நடிகைகளின் வளர்ச்சி என்பது சில ஆண்டுகள் தான் எனும்போது, தனது வளர்ச்சியை நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயம் ஆனவர் ராஷ்மிகா மந்தனா. குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகைகளுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டார். அதிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம், இவரது மார்க்கெட் மேலும் எகிற காரணமாக அமைந்தது. தமிழில் கார்த்தியுடன் சுல்தான் மற்றும் இளைய தளபதி விஜயுடன் வாரிசு போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரின் அடுத்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது டபுள் ட்ரீட் தரும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்தப் படம் புஷ்பா-2 என அனைவரும் அறிந்தது தான். இப்படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால், புஷ்பா-2 படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்தத் தகவல் ரசிகர்களின் காத்திருப்பை மேலும் நீட்டித்துள்ளது. இருப்பினும், படம் எப்போது வெளியாகும் என்ற தேதி படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டின் இறுதியில் டிசம்பர் 6 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முதல் பாகத்தின் பெருவெற்றி தான் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் கடைசி நேர வில்லனாக வரும் பகத் ஃபாசில், இரண்டாம் பாகத்தில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரகாஷ் ராஜ் இரண்டாம் பாகத்தில் இணைவதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், ராஷ்மிகா பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் விக்கி கவுசலுடன் நடித்துள்ள சாவ்வா திரைப்படமும் டிசம்பர் 6 ஆம் தேதியே வெளியாக இருப்பதால், ரசிகர்களுக்கு அன்றைய தினம் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புஷ்பா-2 பான் இந்தியா படமாகவும், சாவ்வா இந்தியிலும் வெளியாவதால் இரண்டு படங்களும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியத் திரையரங்குகளின் திரைகளை டிசம்பர் மாதம் முழுக்க ஆக்கிரமித்து விடுவார் ராஷ்மிகா மந்தனா. மேலும் இவரின் மார்க்கெட் இன்னமும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கத்தில் தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ராஷ்மிகா, இன்று பான் இந்திய கதாநாயகியாக வளர்ந்துள்ளார். மேலும் பல மொழிப் படங்களில் இருந்தும் வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT