சந்தன கடத்தல் வீரப்பனை நாம் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க முடியாது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சந்தன மரங்களை வெட்டி கடத்தியும் வனலிலங்குகளை வேட்டையாடியும் தமிழக -கர்நாடக போலீஸாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவன் வீரப்பன். கடந்த 2004 ஆம் ஆண்டு காவல் துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டான் வீரப்பன். வீரப்பன் இறந்த பிறகு வீரப்பனை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் வந்து விட்டன. இபோதும் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் வீரப்பன் குடும்பத்திலிருந்து வீரப்பனின் மகள் விஜயலக்ஷ்மி சினிமாவில் நடிக்க வந்துள்ளார். KNR ராஜா தயாரித்து இயக்கி நடிக்கும் படம் மாவீரன் பிள்ளை. தர்மபுரி மாவட்ட பின் புலத்தில் உருவாகி உள்ள இந்த படம் குடிக்கு எதிரான கருத்துக்களை பேசுகிறது.
மாவீரன் பிள்ளையில் விஜயலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வெளியிட்டு விழாவிற்கு விஜயலக்ஷ்மி வந்திருந்தார். "எனக்கு எட்டாவது படிக்கும் போதே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பு தடை படக்கூடாது என்பதற்காக என் அம்மா என்னை சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை. இப்போது மீண்டும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவீரன் பிள்ளை படம் குடிக்கு எதிரான கருத்துக்களை பேசுகிறது. குடிக்கு எதிராக போராடுபவர்கள் அனைவருமே மாவீரர்கள்தான். குடி நமது கலாசாரம் மற்றும் குடும்பத்தை மிக மோசமாக பாழ்படுத்தி வருகிறது இது மாற வேண்டும்.இதற்கான ஒரு சிறு முயற்சிதான் இந்த படம்.
என் அப்பா தனி மனித ஒழுக்கத்தை போற்றியவர்.அப்பாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுமாறு நடந்து கொள்ள மாட்டேன் இன்று வழிபாட்டு இடங்களில் கூட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இன்று சிறுவர்கள் பெண்கள் கூட குடிப்பழகத்திற்கு ஆளாகிறார்கள்". என்று வருத்தத்துடன் பேசினார் வீரப்பன் மகள் விஜயலக்ஷ்மி.