William Shakespeare https://emilyspoetryblog.com/
கலை / கலாச்சாரம்

ஷேக்ஸ்பியர் பற்றிய சில சுவையான தகவல்கள்!

எஸ்.விஜயலட்சுமி

வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில இலக்கியத்தில் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்த மாபெரும் நாடக ஆசிரியர். அவர் பிறந்ததும் இறந்ததும் ஏப்ரல் 23 என்பதாலேயே இந்த நாளை உலக புத்தக தினமாகக் கொண்டாடுகிறார்கள். அவரது வாழ்வில் நடைபெற்ற சில சுவையான சம்பவங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஷேக்ஸ்பியர் காலத்தால் அழியாத 'ஹேம்லெட், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபட்ரா ஒத்தெல்லோ போன்ற புகழ் பெற்ற நாடகங்களை எழுதியவர். அவர் பிறந்தது ஏப்ரல் 23. இறந்ததும் அதே தேதியில்தான் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம். அவரை விட எட்டு வயது மூத்த ஆனி காத்தவேவை அவர் மணந்தார்.

2. ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மாடலாக வைத்தே பின்னர் வந்த நாவலாசிரியர்களும் நாடக ஆசிரியர்களும் கதைகளை எழுதினார்கள். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது நாடகங்களை காப்பி அடித்து நிறைய பேர் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது நிறைய நாடகங்களை முதலாம் எலிசபெத் ராணியின் முன்பும் முதலாம் ஜேம்ஸின் முன்பும் அரங்கேற்றியுள்ளார்.

3. அவரது நாடகங்களில் பெண் வேடங்களை ஆண்கள் ஏற்று நடித்தார்கள். பெண்களும் ஆண்களும் சேர்ந்து நடிப்பது அவரது காலகட்டத்தில் சட்டப்படி குற்றமாக இருந்தது. நாடகங்களை பார்வையிட வந்த பார்வையாளர்கள் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். நாடகம் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கைக்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு முகத்தில் எறிவார்கள்.

4. அவர் வாழ்ந்த காலத்தில் மெழுகுவர்த்திகள் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தன. மிக அவசரத்துக்கு மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டன. எனவே, நிறைய எழுத்தாளர்கள் பகல் நேரத்தில் மட்டுமே எழுதினார்கள். இரவு நேரத்தில் எழுதுவது இல்லை.

5. அவருடைய மகன் ஹேம் நெட் திடீரென இறந்து விட்டதால் அவர் அந்த துக்கம் தாளாமல் இருந்தார். அவர் அதன் பிறகு எழுதிய நாடகங்கள் எல்லாம் சோகமயமாகவே இருந்தன. அவருடைய புகழ் பெற்ற நாடகமான ஹேம்லெட்டும் தன்னுடைய இறந்த மகனின் ஞாபகார்த்தமாக எழுதப்பட்டது.

6. அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய நாடகங்கள் நூல்களாகப் பிரசுரிக்கப்படாமல் இருந்தன. பிற நாடக ஆசிரியர்கள் ஷேக்ஸ்பியரின் மேல் இந்த பொறாமையால் அவரை நாடக ஆசிரியர் என்று ஒப்புக்கொள்ளவில்லை.

7. எட்டாம் ஹென்றி நாடகம் நடந்து கொண்டிருக்கும்போதே ஷேக்ஸ்பியருக்கு சொந்தமான குளோப் தியேட்டர் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

8. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் ஷேக்ஸ்பியரின் மிகத் தீவிரமான ரசிகர். அவருடைய நாடகங்களில் இருந்து பாடல் வரிகளை அடிக்கடி தன்னுடைய நண்பர்களுக்கு சொல்லுவார். அவரைக் கொன்ற ஜான் பூத் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

9. ஷேக்ஸ்பியர் 3000 புதிய வார்த்தைகளை ஆங்கில மொழிக்கு உருவாக்கித் தந்தார். அவருடைய நாடகங்களில் 600க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட பறவைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய நாடகங்கள் இன்றும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. டிவி சீரியல் ஆகவும் திரைப்படங்களாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லண்டனில் மாடர்ன் தியேட்டர் உருவாக்கப்பட்டு ஷேக்ஸ்பியருக்கு சொந்தமான குளோப் தியேட்டர் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10. அவர் எழுதிய உயிலில் எல்லா சொத்துக்களையும் தன்னுடைய மகள் சூசனாவுக்கு எழுதி வைத்தார். தன்னுடைய மனைவிக்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை போன்ற படுக்கை சம்பந்தப்பட்ட பொருட்கள் வைக்கும் ஒரு பெட்டியை மட்டும் சொத்தாக எழுதி வைத்தார் என்பது வினோதமானது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT