Tattoo 
கலை / கலாச்சாரம்

பச்சைக்குத்தும் வழக்கம் குறைந்து போவது ஏன்?

தேனி மு.சுப்பிரமணி

உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்திப் பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வதைப் பச்சைக் குத்துதல் என்கின்றனர். உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்ளல் பச்சைக்குத்துதல் என்று சொல்லலாம். இது ஒரு நாகரிகப் பாணியாகவும் சில இனக்குழுமங்களில் சடங்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்ணை விலங்குகளை இனங்காணும் நோக்கில் அடையாளப்படுத்தவும் பச்சைக்குத்தல் பயன்படுத்தப்படுகிறது.

பச்சைக் குத்துதல் பல்வேறு நாகரிகங்களிலும் காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. சப்பானிய ஐனு இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், முகத்தில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள். இந்திய, இலங்கை உள்ளிட்ட மக்களிடமும் பழங்காலத்திலிருந்து பச்சைக் குத்தும் வழக்கம் இருந்து வருகிறது.

ஐரோப்பியா - ஆசியா நாடுகளில், பச்சைகுத்துதல் என்பது கற்காலத்திலிருந்து நடைமுறையிலுள்ள வழக்கமாகும். கி.மு 4000 முதல் கி.மு 5000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஒட்சிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஓட்சி பனி மனிதனின் கை, கால்களில் பச்சை குத்தியதற்கான அடையாளம் காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை முழங்காலின் கீழ், மணிக்கட்டு, முண்ணான் முடிவு முதலான பகுதிகளில் இடப்பட்ட புள்ளிகளும் கோடுகளுமாக இருந்தன. இவை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான அக்குபஞ்சர் மருத்துவ வகையாகவும் கருதப்படுகிறது.

இக்கலை தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆசியாவின் பிற பகுதிகளிலும், அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானியரின் அக்குபஞ்சர் மருத்துவ முறையானது பச்சைக் குத்துதல் கலையோடு தொடர்புப்படுத்தப்படுகிறது.

அமெரிக்க தோலியல் கல்வி அமைப்பு பச்சைக் குத்துதலைக் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்துகிறது.

  1. இயற்கையிலான (அ) தழும்புகளாலானது - இது விபத்துக்களாலான காயங்களால் ஏற்படுவது.

  2. தொழில்முறை சார்பிலானது - அனேகப் பச்சைக்குத்தல்கள் குலங்கள், கூட்டங்கள், சமூகநிலை, சமயம் அல்லது நம்பிக்கை பற்றி, வீர தீரத்தைக் காட்டுவதற்காக, காதலை வெளிப்படுத்தி, தண்டனைகளைக் குறிக்க, பாதுகாப்புக்காக இடப்படுகின்றன. அத்தகைய பச்சைகுத்தல்கள் தொழில் ரீதியிலானது எனப்படும்.

  3. அலங்கார அல்லது அழகியல் வழியிலானது பச்சைக்குத்தல்கள்.

  4. மருத்துவ நோக்கிலானது.

  5. அடையாளப்படுத்துவதற்கானது

உடலின் மேல் தோலின் கீழாக, நிறப்பொருள்களை உட்செலுத்துவதன் மூலம் பச்சைக்குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு உட்செலுத்தப்பட்ட நிறப்பொருள் கீழ்ப்புற மேல் தோலின் கீழாகப் பரவி, மேல் தோல் கலங்களைச் சிதைக்கும். இவ்வாறு தோற்றுவிக்கப்படும் நிறப்பொருளை, பிற பொருளாகக் கருதி உடலின் நிர்ப்பீடனத் தொகுதியிலுள்ள பிற பொருள் எதிரிகளைச் சுரந்து வளைத்துக் கொள்ளும்.

உடலில் மார்பு, மேல் கை, முன்னங் கை, கால் போன்ற பகுதிகளில் பச்சை குத்தப்படுகிறது. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தோர் பச்சை குத்தும் தொழிலில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்து அரைக்கின்றனர். அதனை ஒரு துணியில் கட்டி, தீயிலிட்டு எரித்துக் கரியாக்கிக் கொள்கின்றனர். நீர் கலந்து அதனைப் பசையாக்குகின்றனர். கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி எடுத்துத் தேவையான உருவங்களை வரைகின்றனர். பச்சை குத்தப்பட்ட பின் சுடுநீரால் கழுவி அதனைச் சுத்தம் செய்கின்றனர். இப்பொழுது பச்சை குத்திய இடம் அழகாகத் தோற்றம் அளிக்கும். இது எந்நிலையிலும் அழியாது.

தெய்வ வடிவங்கள், கோலங்கள், தேள், பாம்பு போன்ற உருவங்கள், பெயர்கள் போன்றவை பச்சை குத்துதலில் அதிகமாக இடம் பெறுகின்றன. குறிப்பாக, பெண்கள் அழகிற்காகவும், அடையாளத்திற்காகவும் இக்கலையைப் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சின்னங்கள், திரைப்பட நடிக, நடிகையர் படங்களைப் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுகிறது.

தற்பொழுது, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கம் குறைந்து போய்விட்டது. அழகிய உருவங்களுக்கான அச்சின் வழியாக, மருதாணிப் பசை கொண்டு உடலில் பல உருவங்கள் உருவாக்கப்படுகின்றன.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT