முத்து சிப்பி https://arultamilann.blogspot.com
பசுமை / சுற்றுச்சூழல்

சிப்பிக்குள் முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

முத்துக்கள் பழைமையான ரத்தினங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எகிப்தியர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களால் அவை மதிக்கப்பட்டன. விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைரம் போன்றவை மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. ஆனால், முத்துக்கள் ஒரு உயிரினமான சிப்பிக்குள் இருந்து எடுக்கப்படுகின்றன. சிப்பிக்குள் முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிப்பிகளின் உடலமைப்பு: ஆய்ஸ்டர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிப்பிகள் மற்றும் மட்டி என்ற கடல் விலங்குகளின் ஓடுகளுக்குள் மதிப்புமிக்க முத்துக்கள் தயாராகின்றன. ஓட்டிற்குள் இருக்கும் சிப்பிக்கு வயிறு, வாய், இதயம், குடல்கள், செவுள்கள், ஆசனவாய், கடத்தல் தசை, மேலங்கி போன்ற பாகங்கள் இருக்கும். சிப்பிகள் வளர வளர அதனை சுற்றியுள்ள ஓடுகளும் வளர வேண்டும். சிப்பி ஓட்டின் விளிம்புகளில் ஒரு புதிய பொருள் சேர்க்கப்படும்போது ஓடுகள் வளர்கின்றன. இந்தப் பொருள் மேலங்கி என்ற மேண்டில் மூலம் தயாரிக்கப்படுகிறது.

மேண்டில் என்ற மேலங்கி: மேண்டில் என்பது ஒரு மென்மையான சதைப்பற்றுள்ள வெளிப்புற உறையாகும். இது ஓட்டுக்கும் சிப்பியின் உடலுக்கும் இடையில் இருக்கும் திசுக்களின் ஒரு அடுக்கு ஆகும். இது மேலங்கிக்கும் சிப்பியின் உடலுக்கும் இடையில் ஒரு குழி போன்ற பகுதியை உருவாக்குகிறது. இது மேலங்கி குழி என்று அழைக்கப்படுகிறது.

மூன்று அடுக்கு ஓடுகள்: மேலங்கி கால்சியம் கார்பனேட் தாதுக்களை சுரக்கிறது. கரிம புரதத்துடன் சேர்ந்து ஓட்டை உருவாக்குகிறது. சிப்பியின் ஓடு வெளிப்புற அடுக்கு, உட்புற அடுக்கு என்ற நாக்ரே அடுக்கு, நடுத்தர அடுக்கு என மூன்று வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது. நாக்ரே அடுக்கு அதன் மாறுபட்ட ஒளி, பிரதிபலிப்பு குணங்கள் காரணமாக முத்து அடுக்கு என்றும்,  முத்துக்களின் தாய் என்றும் அழைக்கப்படுகிறது. இது பொத்தான்கள் மற்றும் பிற அலங்கார பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

சிப்பிக்குள் முத்துக்கள் எவ்வாறு உருவாகின்றன?

சிப்பி மற்றும் மேலங்கிக்கு இடையே உள்ள குழிக்குள் முத்து உருவாகிறது. சில சிப்பி இனங்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு அடுக்குகளை சுரக்கும். ஒவ்வொரு அடுக்கும் நம்ப முடியாத அளவிற்கு மெல்லியதாக இருக்கும். ஒரு முத்துவை உருவாக்கும் பெரும்பாலான நாக்ரே அடுக்குகள் ஒரு மில்லி மீட்டர் அல்லது ஒரு மைக்ரானின் ஆயிரத்தில் ஒரு பங்கு மெல்லியதாக இருக்கும்.

சிப்பி அதிக அடுக்குகளை சேர்ப்பதால் உள்ளிருக்கும் சிறிய பொருள் முழுமையாக மூடப்பட்டு மென்மையாக பளபளப்பாக மாறும். இப்படித்தான் ஒரு முத்து தயாரிக்கப்படுகிறது. இந்த முத்து உருவாக சில நேரங்களில் பல ஆண்டுகள் வரை கூட ஆகும்.

முத்துக்களின் வகைகள்:

1. இயற்கை முத்துக்கள்: காடுகளில் தாங்களாகவே சிப்பிகளால் தயாரிக்கப்படுகின்றன.

2. வளர்க்கப்படும் முத்துக்கள்: சிப்பியின் உள்ளே வேண்டுமென்றே ஒரு சிறிய பொருளை வைத்து முத்து உருவாக்கப்படுகின்றன. அது  பெரியதாகவும் பளபளப்பாகவும் மாறும்போது மக்கள் ஓட்டை திறந்து முத்தை வெளியே எடுப்பார்கள்.

முத்துக்களின் வண்ணங்கள்: முத்துக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, கருப்பு, நீலம் மற்றும் பச்சை போன்ற பல்வேறு வண்ணங்களில் வருகின்றன. சிப்பியின் வகைகள் மற்றும் அவை வாழும் தண்ணீரைப் பொறுத்து இந்த நிறங்கள் மாறக்கூடும்.

வடிவங்கள்: எல்லா முத்துக்களும் சரியாக வட்ட வடிவமாக இருக்காது. ஓவல் வடிவம், கண்ணீர் துளி வடிவம் அல்லது ஒழுங்கற்ற வடிவத்தில் கூட இருக்கலாம். கடலில் வாழும் சிப்பிகளால் உருவாக்கப்படும் முத்துக்கள் உப்பு நீர் முத்துக்கள் எனவும் ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழும் மட்டிகளால் செய்யப்படும் முத்துக்கள் நன்னீர் முத்துக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT