Vayjayanthi crop https://m.shopclues.com
பசுமை / சுற்றுச்சூழல்

‘வைஜயந்திமாலா’ என்றால் என்னவென்று தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

‘வைஜயந்திமாலா’ என்றதும் நம்மில் பலருக்கும் பழம் பெரும் நடிகை ஒருவரின் பெயரே உடனே நினைவுக்கு வரும். ஆனால், ‘வைஜயந்திமாலா’ என்பது புல் வகை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பயிரின மாலை ஆகும். ‘நெற்பவளம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. இது தானிய உணவாகவும், ஆபரணமாகவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை உயர உயர இந்த நெற்பழம் மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளது. இப்பயிர் கிழக்காசிய நாடுகளை தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் மதுரா காடுகளிலும், ஒரிசா, பீகார் போன்ற பகுதிகளில் வயல் ஓரமாகவும் தானாகவே நிறைய வளர்ந்து காணப்படும்.

சதுப்பு நிலங்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் ஈரம் மிகுந்த பகுதிகளில் தானாகவே வளரக்கூடியவை. இதற்கு குறைந்தபட்ச நீரே போதுமானது. நன்கு நீர் கிடைக்கும் இடங்களில் ஆறடி உயரம் வரை கூட வளர்ந்து நிறைய மணிகளைத் தரும். வட மாநிலங்களில், ‘வைஜயந்தி’ என்று அழைக்கப்படும் இது, நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதனை தானியமாகவும் தாராளமாக உட்கொள்ளலாம்.

கடினமான, பளபளக்கும், நடுவில் துவாரம் உள்ள இந்த மணியை கோர்த்து ஆபரணமாக அணிய, உடல் ஆரோக்கியம் பெறும்.நெற்பவள மணிகளால் ஆன வளையல்கள், காதணிகள், மாலைகள் போன்ற பலவித ஆபரணங்கள் முற்காலத்தில் மக்களிடையே பழக்கத்தில் இருந்தன.

Mother Teresa with Vyjayanthi Malai

ஆன்மிகத்தில் இதன் பங்கு கணிசமாக உள்ளது. இன்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஜப மாலையாக நெற்பவளத்தை உபயோகிக்கின்றனர். அன்னை தெரசா நெற்பவள மணிகளால் ஆன ஜபமாலையை எப்பொழுதும் தம் கைகளில் வைத்திருப்பார். இந்து சமயத்திலும் இதனை பலரும் மாலையாக அணிகிறார்கள். பௌத்த, முஸ்லிம் சமயங்களிலும் இதற்கு சிறப்பான இடம் உண்டு.

நெற்பவளம் செடியை தொட்டிகளில் சுலபமாக வளர்க்கலாம். மகாபாரதப் போரில் ஸ்ரீகிருஷ்ணர் நெற்பவள மாலைகளை அணிந்துதான் போர்க்களம் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செடியை வீட்டில் வளர்க்க, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நெற்பவள மணிகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை வடிகட்டி குழந்தைகளை குளிப்பாட்ட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT