Palm Tree 
பசுமை / சுற்றுச்சூழல்

பனைமரம் பற்றிய சுவாரசிய தகவல்கள்! 

கிரி கணபதி

நமது தமிழ்நாட்டின் பாரம்பரிய மரமான பனைமரம், உயரமாக வளரக்கூடியது மட்டுமல்ல பல மருத்துவ குணங்களையும் கொண்டதாகும். இதன் காரணமாகவே நமது முன்னோர்கள் இந்த மரத்தை தெய்வமாக வழிபட்டனர். ஏனெனில் இந்த மரத்தில் உள்ள அனைத்தையுமே நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில் பனைமரத்தை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

பனைமரம் என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது அதன் நுங்குதான். அதாவது பனங்காயின் உள்ளே இருக்கும் ஒரு ஜெல்லி போன்ற உணவுதான் நுங்கு. இதை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த நுங்கு உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதாகும். 

ஒருவேளை பனங்காய் முற்றிவிட்டால் அது பழுத்ததும் கிடைக்கும் பனம்பழமும் சாப்பிடக்கூடிய உணவுதான். அதை நெருப்பில் சுட்டு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். 

பனங்கொட்டைகளை முளைக்க வைத்து அந்தக் கிழங்கையும் சாப்பிடலாம். பனங்கிழங்கில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலுக்கு எல்லா விதங்களிலும் நன்மை தரும். பனங்கிழங்கை நன்கு உலர்த்தி அதை மாவாக்கி உப்பு போட்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டம் கிடைக்கும். 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியதாகும். இதைக் காய்ச்சி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டை அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவில் கலந்து கொடுத்தால், அம்மையின் தாக்கம் குறையும். 

சளித் தொந்தரவு உள்ளவர்கள் பாலில் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், சளி பிரச்சனை நீங்கும். மேலும் வயிற்றுப்புண் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளையும் இது சரி செய்யும். 

பொதுவாகவே கோடைகாலங்களில் சிறவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வியர்க்குரு பிரச்சனை வரும். இதை சரி செய்வதற்கு பனைநுங்கை வியர்க்குருவின் மேல் தேய்த்தால் அது விரைவில் சரியாகும். அதேபோல அல்சர் பாதிப்பு இருப்பவர்களும் நுங்கு சாப்பிடுவதால், விரைவில் அதை சரி செய்யலாம். 

இது தவிர பனை ஓலையைப் பயன்படுத்தி பல்வேறு விதமான, கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் பனை மரத்தையும், வீடு கட்டுவதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இப்படி பனை மரத்தின் எல்லா பாகங்களும் நமக்கு பலன் தரக்கூடியதாகும். எனவே ஒவ்வொருவரும் உங்களது வீட்டில் ஒரு பனைமரமாவது வளர்க்க முயற்சி செய்யவும். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT