Orchid flowers 
பசுமை / சுற்றுச்சூழல்

நேர்மறை ஆற்றலையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடிய ஆர்க்கிட் மலர்கள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ர்க்கிட் என்பது ஒரு வித்திலையைக் கொண்ட பூக்கும் தாவரக் குடும்பமாகும். ஆர்க்கிட் பூக்கள் உலகில் பூக்கும் தாவரக் குடும்பங்களிலேயே இரண்டாவது மிகப்பெரிய குடும்பமாகும். பூக்கும் தாவரங்களில் இதுவே மிகவும் அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்டது. ஆர்க்கிட்கள் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன.

ஆர்க்கிட் தாவரங்களில் மிகப்பெரியது டைகர் ஆர்க்கிட் தாவரம். ஒவ்வொரு டைகர் ஆர்க்கிட் மலரும் கிட்டத்தட்ட 10 சென்டி மீட்டர் அகலம் வரை வளரக்கூடும். இந்த மலர்கள் பார்க்க புலியின் தோல் போல் இருக்கும். டைகர் ஆர்க்கிட் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட மலராகும். இது முழுமையாக வளர கிட்டத்தட்ட15 ஆண்டுகள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இவை சில ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கும்.

ஆர்க்கிட் மலர்கள் மலர்ந்த பின்பு பல நாட்கள் வாடாமல் இருக்கும். பல ஆர்க்கிட்கள் மரத்தைப் பற்றிக்கொண்டு கொடி போல் வளரும். சில வகை தரையில் இருக்கும். சிங்கப்பூரின் தேசிய மலர் ஆர்க்கிட்டாகும். ஆர்க்கிட் பூக்களின் முக்கியத்துவம் அதன் நிறத்தைப் பொறுத்து மாறுபடும். ஆர்க்கிட் குடும்பத்தின் பெயர் ஆர்க்கிடேசி. ஆர்க்கிட் குடும்பத்தில் 25000கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் 1256 வகையான ஆர்க்கிட் இனங்கள் உள்ளன.

ஆர்க்கிட் மலர்கள் ஆற்றல் மற்றும் அழகை குறிக்கின்றது. இவை காதல் மற்றும் ஆடம்பரத்தை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளது. கம்பீரமாக தோற்றமளிக்கும் இவை பரிசளிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்க்கிட் பூக்கள் பலவகையான வண்ணங்களில் கிடைக்கின்றன. ஊதா ஆர்க்கிட் மலர், நீல ஆர்க்கிட், வெள்ளை ஆர்க்கிட், இளம் சிவப்பு மல்லிகைகள், டைகர் ஆர்க்கிட் (புலியின் தோல் போல்), பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என பல வண்ணங்களில் காணப்படுகின்றன. நீல ஆர்க்கிட் மலர்கள் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கானது. ஊதா வண்ணம் அதிகாரம் மற்றும் கண்ணியத்தை விளக்கும் வகையில் ஆழ்ந்த போற்றுதலுக்கும் மரியாதைக்கும் அடையாளமாக உள்ளது.

வெள்ளை நிறம் தூய்மை, நேர்த்தியான தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை குறிக்கின்றன. இவை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும். இளம் சிவப்பு மல்லிகைகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகப் பார்க்கப்படுகின்றது. ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிற ஆர்க்கிட்கள் உற்சாகத்தைத் தரும். வாஸ்து சாஸ்திரத்தின்படி ஆர்க்கிட் மலர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் மலர்கள் எனப் போற்றப்படுகின்றன.

புதுமண தம்பதிகளுக்கு ஆர்க்கிட் செடிகள் அல்லது பூக்களை பரிசாக கொடுக்க பரிந்துரைக்கிறது. இவை உறவை வலுப்படுத்தவும், நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தவும் செய்யும். நேர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் சக்தி இந்த ஆர்க்கிட் வகை பூக்களுக்கு உண்டு. இந்தியாவில் பலவகையான ஆர்க்கிட் வகைகள் உள்ளன. பொதுவாக Corsage Orchids என்று அழைக்கப்படும் இவை எல்லா இடங்களிலும் கிடைக்கும் மிகவும் பொதுவான வகைகள். இந்த பூக்களின் கலப்பினத்தால்தான் இவை பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. சிறிய தொட்டிகளில் எளிதில் வளரக்கூடிய ஆர்க்கிட் வகைகளில் டென்ட்ரோபியம் ஆர்க்கிட்ஸ் சரியாக பூக்க ஒரு ஸ்டாக்கிங்கின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான ஆர்க்கிட்களில் சில வெளிநாட்டு வகைகளும் கிடைக்கின்றன. தேங்காய் ஆர்க்கிட் என்றழைக்கப்படும் மாக்சில்லாரியா ஆர்க்கிட், மூங்கில் மல்லிகை என அழைக்கப்படும் அருண்டினா ஆர்க்கிட் போன்றவை. நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், அதிர்ஷ்டத்தையும் அழகையும் தரக்கூடிய ஆர்கிட் பூக்கள் மற்றும் அவற்றின் தாவரங்களை வாஸ்து மற்றும் ஃபெங் சுய் இரண்டும் வீட்டில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT