Cooking tips... 
உணவு / சமையல்

பொதுவாக தவிர்க்க வேண்டிய 6 சமையல் தவறுகள்!

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

1. அதிக வேகவைத்த காய்கறிகள்: 

காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டு சாதத்தை குறைவாக சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வு இப்பொழுது எல்லோருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. காய்கறிகளை அதிகமாக சமைப்பது அதில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை இழக்க வழிவகுக்கும், ஏனெனில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வெப்பத்தை உணர்திறன் கொண்டவை மற்றும் நீண்ட நேரம் சமைப்பதன் மூலம் அவை அழிக்கப்படலாம்.

மேலும் புரதங்கள், கார்போஹைட்ரேட் உள்ள காய்கறிகளை அளவாக வேகவைத்து சாப்பிட்டால்தான் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அளவு அதிகரிக்கும். பொதுவாக எந்தெந்த வகை காய்கறிகளை எவ்வளவு நேரம் சமைக்கலாம் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி சமைத்தால் காய்கறிகளின் முழு சத்துக்களும் நம் உடலை சென்றடையும்

2.எண்ணெய் அல்லது வெண்ணெய் அதிகமாகப் பயன்படுத்துதல்: 

அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை  பயன்படுத்துவதால் உடலில் கொழுப்பின் அளவு கூடுதல், ரத்தக் குழாய் அடைப்பு, இதய நோய், உடல் பருமன் அதிகரிப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றுடன் தற்போது காய்கறிகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் யும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

எந்த எண்ணெய்யாக இருந்தாலும் 'தாராள' மனப்பான்மையைக் கைவிட்டு, சமையலுக்கு இரண்டு முதல் 3 தேக்கரண்டிக்கு மிகாமல் எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். எண்ணெய்களில் பெரும்பாலும் 'வைட்டமின் ஈ', கொழுப்புச் சத்துகள் மிகுந்திருக்கும். ஆனால் ஒவ்வோர் எண்ணெய்க்கும் தனித்தன்மை உண்டு. அதனைக் கருத்தில்கொண்டு எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாகச் சொல்லப் படுகிறது. இருந்தாலும் சூடுபடுத்தினால் ஆலிவ் எண்ணெய்யின் தன்மை மாறிவிடுவதாகக் கூறப்படுகிறது.

3. அதிக வெப்பநிலையில் சமைப்பது

அதிக வெப்பநிலையில் சமைப்பது, ஆழமாக வறுப்பது அல்லது அதிக வெப்பத்தில் வறுப்பது போன்றவை, புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய அக்ரிலாமைடுகள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்க வழிவகுக்கும். அதிக வெப்பநிலையில் உணவை சமைக்கும்போது பல ஆவியாகும் பொருட்கள் உணவில் உற்பத்தி செய்ய ஆரம்பித்து உடலினுள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

4.உணவுப் பாதுகாப்பைப் புறக்கணித்தல்:

முறையற்ற உணவைக் கையாளுதல், அதாவது சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுகளை சமைக்காமல் ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளை திரும்பத் திரும்ப சமைப்பது  அப்படியே எந்த காய் கறிகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று தெரிந்து கொண்டு சமைத்தாலும் தேவைக்கு அதிகமாக சமைப்பது அல்லது மீதாமாகும் உணவுகளை சமைத்த பின் நீண்ட நாட்கள் பிரிட்ஜில் சேமித்து அல்லது சூடு செய்து சாப்பிட்டால்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும். பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதன் விளைவாக உணவு மூலம் பரவும் நோய்கள் விரைவில் நம்மை தாக்க ஆரம்பிக்கும்

5. நான்-ஸ்டிக் குக்வேர் 

நான் ஸ்டிக்கின் ஒட்டாத மேற்பரப்பு காரணமாக சமைப்பதற்கு வசதியான, பாத்திரமாக நீண்ட காலமாக பார்க்கப்பட்டது. இது சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது மற்றும் சமையலுக்கு குறைந்த எண்ணெய் தேவைப்படுகிறது என்ற காரணங்களுக்காக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் நான்-ஸ்டிக் குக்வேர்கள் கடுமையான பக்க விளைவுகளை கொண்டு இருக்கின்றன. நீண்ட கால உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்புகளை கொண்டு இருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது, நான்-ஸ்டிக் குக்வேரின் முதன்மையான கவலைகளில் ஒன்று அதில் இருக்கும் அமிலங்கள் என்று கூறப்பட்டு உள்ளது. பெர்ஃப்ளூரோக்டானோயிக் அமிலம் (பிஎஃப்ஓஏ) மற்றும் பெர்ஃப்ளூரோக்டேன்சல்போனிக் அமிலம் (பிஎஃப்ஓஎஸ்) ஆகியவை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை.

இவை டெஃப்ளான் போன்ற ஒட்டாத பூச்சுகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் ஆகும். ஒட்டாத சமையல் பாத்திரங்கள் அதிக வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது, ​​இந்த இரசாயனங்கள் நச்சுப்புகைகளை காற்றில் வெளியிடலாம், இந்த புகையை சுவாசிக்கும் நபர்களுக்கு உடல்நல அபாயங்கள் ஏற்படும்.

சமையல் எண்ணெய்...

6. சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்துதல் 

சரியான முறையில் சரியான விகிதத்தில் எண்ணெயை உட்கொள்வது பெரும்பாலும் உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தாது. பலர் இந்த நடைமுறையை பின்பற்ற தவறுகின்றனர். மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில் ஆபத்தான விளைவுகள் பற்றி மிகச் சிலரே அறிந்திருக்கிறார்கள். அதாவது பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தினால் எண்ணையின் வேதியல் கலவையில் அதிக சார்ஜ் செய்யப்பட்டு ப்ரீ ரேடிக்கில்கள் அல்லது சார்ஜ் செய்யப்படாத மூலக்கூறுகள் நம்முடைய இதயத்தை பதம் பார்க்க ஆரம்பித்து விடுகின்றன. அதைத் தவிர உடல் பருமன் ஏற்பட்டு அனைத்து வியாதிகளும் நம் உடம்பில் குடிபுகுந்து வாடகையே இல்லாமல் நம் உடம்பை அனுபவிக்க ஆரம்பித்துவிடும்.

மேற்சொன்ன ஆறு சமையல் தவறுகளை தவிர்த்து முழு மனதுடன் சந்தோஷமாக சமையல் செய்து குடும்பத்தினருடன் அமர்ந்து பரிமாறி சாப்பிட்டால் வயிறு நிறைவது மட்டுமல்ல, உடம்பில் வியாதிகள் வருவதற்கு தடுப்புச் சுவர் போடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

SCROLL FOR NEXT