ரொம்ப டேஸ்டியான, ஹெல்தியான உப்புமா இது. செய்வதும் எளிது. இதற்கு புளிச்ச மோர் உபயோகப்படுத்துவது அதிக ருசியை கூட்டும்.
தேவையான பொருட்கள்:
ரவை ஒரு கப்
புளிச்ச மோர் 2 கப்
தண்ணீர் 3 கப்
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய் 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறிது
சீரகம் 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
நெய் வாசனைக்கு 2 ஸ்பூன்
கங்காள உப்புமாவிற்கு ரவையை வறுக்கத் தேவையில்லை. வாணலியில் நல்லெண்ணெய், சிறிது நெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், சீரகம், காய்ந்த மிளகாய் 2 கிள்ளிப் போட்டு கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சி துண்டுகளை சேர்த்து கறிவேப்பிலை போட்டு இரண்டு வதக்கு வதக்கி மூன்று கப் தண்ணீர், இரண்டு கப் புளித்த மோர் சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் தூவி விடவும்.
நடுக்கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து ரவையை சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். இந்த உப்புமா உதிர் உதிராக வராமல் சிறிது சேர்ந்தாற் போல் தான் இருக்கும். இதுவே அதன் சுவையை இன்னும் கூட்டிக் கொடுக்கும். ரவை நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை மேலாக விட்டு மூடி வைக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள அருமையான சட்னி இதோ:
வேர்க்கடலை 1/4 கப்
பொட்டுக்கடலை 1/4 கப்
உப்பு தேவையானது
மிளகாய் வற்றல் 5
எள் 2 ஸ்பூன்
புளி சிறிது
வெறும் வாணலியில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு சூடு வர வறுத்துக்கொண்டு கடைசியாக எள் 2 ஸ்பூன் (கருப்பு எள் அல்லது வெள்ளை எள்) சேர்த்து எள் பொரிந்ததும் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஒன்று கிள்ளிப்போட்டு நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான சட்னி தயார்.