சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும், பெண்களுக்கு அதிக நன்மைகள் வழங்கும் உளுந்து குழம்பு எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - ½ கப்
பூண்டு - 10 பல்
தேங்காய் - ½ மூடி
கருப்பு உளுந்து - ½ கப்
புளி - சிறிதளவு
தக்காளி - 2
கடுகு - ½ ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலை உரித்து நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் தேங்காயையும் துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் உளுந்து சேர்த்து நன்றாக வறுக்கவும். பின்னர் உளுந்தை வேறு பாத்திரத்தில் மாற்றி அதே கடாயில் சீரகம், சோம்பு, தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உப்பு, தக்காளி சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேக விட வேண்டும். வெங்காயம், தக்காளி, பூண்டு நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்ததாக கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை சேர்த்து மேலும் கூடுதலாக தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் அதில் சிறிதளவு வறுத்த உளுந்தை சேர்க்க வேண்டும். அடுத்ததாக ஏற்கனவே வறுத்து வைத்துள்ள தேங்காய், சோம்பு, சீரகம், உளுந்து போன்றவற்றையும் மிக்ஸியில் கெட்டியான பதத்திற்கு அரைத்து, குழம்பு நன்றாக கொதித்ததும் அதை சேர்க்கவும்.
இதை சேர்த்ததும் குழம்பு அடி பிடிக்கும் என்பதால் தீயை மிதமான சூட்டில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். குழம்பு நன்றாக சுண்டி கெட்டியான பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்தால், சூடான சுவையான உளுந்து குழம்பு ரெடி.
இதை சப்பாத்தி, சாதம், இட்லி, பூரி என அனைத்திற்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக இதை மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சாப்பிடுவது நல்லதாகும்.