தேவையானவை: கோதுமை மாவு - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், பொரிக்க - தேவையான எண்ணெய், ஏலம் - தேவையான அளவு, உப்பு ஒரு சிட்டிகை. அலங்கரிக்க கொஞ்சம் முந்திரி.
செய்முறை: முதலில் கோதுமை மாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பூரிக்கு மாவு பிசைவதுபோல பிசைந்து பூரிகளாக சுட்டு எடுக்கவேண்டும். சற்று ஆறியதும் இந்த பூரிகளை மிக்ஸியில் பொடி செய்துகொள்ள வேண்டும். சர்க்கரையையும் ஏலக்காயையும் பொடி செய்து, இரண்டையும் பூரி பொடியுடன் கலந்து, உருண்டைகளாக பிடித்தால் பூரி லட்டு தயார். மிக எளிதாக செய்யக்கூடிய தீபாவளி பலகாரம் இது. ஆனால் சாப்பிட மிக சுவையாக இருக்கும். குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், ஒன்றிரண்டாக உடைத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை - கால் கப், ஊற வைத்த கடலை பருப்பு, பயத்தம் பருப்பு - கால் கப், தனி மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேவையான எண்ணெய் – பொரிக்க.
செய்முறை: ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் நீர் வைத்து, கொதித்த பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, அரிசி மாவை கொட்டி கிளறி இறக்கி ஆறவைக்கவும். பின் மீதி பொருட்களை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து, மாவாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி தட்டைகளாக தட்டி பொறித்தால் நிப்பட்டுகள் ரெடி. இது கரகர மொரு மொரு என்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நாம் ஒன்றிரண்டாக உடைத்துப் போட்ட நிலக்கடலையும் பொட்டுக்கடலையும் வாயில் கடிபடும். அப்போது அவ்வளவு ருசியாக இருக்கும்.
- உமா மோகன்தாஸ்