Depression man 
வீடு / குடும்பம்

மனச்சோர்வை விரட்டும் மகத்தான 7 வழிகள்!

பொ.பாலாஜிகணேஷ்

னச்சோர்வு உள்ளவர்களுக்கு காலையில் எழுவது முதல், குளிப்பது வரை எல்லா வேலையுமே கடினமாகத்தான் தெரியும். மனச்சோர்வு என்பது ஒரு பொல்லாத வியாதி என்று கூடக் கூறலாம். மனச்சோர்வு நம் உடலை சோர்வாக்குவதுடன் நம் வெற்றியைத் தடுக்கும், நம் நோக்கத்தை சிதறடிக்கும் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

மனச்சோர்வு என்பது உடல், மனநிலை மற்றும் எண்ணங்களை உள்ளடக்கிய ஒரு பிரச்னையாகும். இது ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது. வார, மாதக்கணக்கில் பின்தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கும். தினசரி வழக்கத்தில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் விரைவாக இதில் இருந்து மீண்டு வந்துவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. தூங்கி எழுதல்: மனச்சோர்வு உள்ளவர்கள் தூக்கப் பிரச்னையை எதிர்கொள்வார்கள். இரவில் தூக்கம் வராமல் தவிப்பார்கள். இரவில் இடையூறு இன்றி தூங்குவதற்குப் பழகிவிட்டாலே உடலுக்கும், மனதுக்கும் நன்றாக ஓய்வு கிடைத்துவிடும். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு அறையில் மங்கலான வெளிச்சம் தரும் விளக்குகளை பயன்படுத்தலாம். நறுமணம் தரும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். இனிமையான இசையை கேட்டு ரசிக்கலாம். இவை ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கக்கூடியவை.

2. நடைப்பயிற்சி: காலை அல்லது மாலை வேளைகளில் சிறிது தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உதவும். வெளியில் செல்ல விருப்பம் இல்லாவிட்டாலும் அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் நடந்து வரலாம். இது மனதை இலகுவாக்கும்.

3. படித்தல் - எழுதுதல்: தினமும் புத்தகங்கள், நாளிதழ்கள் படிப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அன்றைய நாளில் நடந்த சம்பவங்களையோ அல்லது மனதிற்கு பிடித்தமான விஷயங்களையோ எழுதி வைக்கும் பழக்கத்தையும் பின்பற்றலாம். அப்படி எழுதுவதும் மனதை லேசாகும்.

4. அழுதல்: மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்கள் நிலைமை மோசமாக இருப்பதாக உணரும்போது சில விஷயங்களை செய்வதற்குத் தயங்கக்கூடாது. அழ வேண்டும் என்ற உணர்வு எழுந்தால் அழுதுவிட வேண்டும். அப்படி அழுவது மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்துவிட உதவும். மனச்சோர்வுக்கு ஆளாகும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் தயங்கக்கூடாது. மனச்சோர்வுக்கு ஆளாகும் சமயத்தில் தனிமையை நாடக்கூடாது. நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது நல்லது. அவர்களிடத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது நன்றாக உணர வைக்கும்.

5. குற்றம் சாட்டுதல்: உங்களை நீங்களே குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும். மனச்சோர்வு உள்ளவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிவிடுவார்கள். மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு மன நிம்மதியை குலைத்துவிடுவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் மகிழ்ச்சியாக இருந்த நாட்களை நினைவு கூருங்கள். அந்த நாட்களில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்த்தாலே போதும், மன இறுக்கம் தளர்ந்துவிடும். மனச்சோர்வுக்கு ஆளாகும் சமயத்தில் மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். அன்பாக இருங்கள்.

6. மகிழ்ச்சியை தக்கவைத்தல்: மனச்சோர்வு வாழ்நாள் முழுவதும் பின்தொடரக்கூடிய வியாதி அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில விஷயங்களை செய்யும்போது நினைத்தபடி நடக்காமல் போய்விடும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போய்விடும்போது மனம் தடுமாற்றம் அடைவது இயல்பானது. அதில் இருந்து விரைவாக மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

7. அறையை ஒழுங்கமைத்தல்: மனச்சோர்வில் இருக்கும்போது அதிக நேரம் பயன்படுத்தும் இடங்களில் சில மாறுதல்களை செய்வது மன மாற்றத்திற்கு வித்திடும். படுக்கை அறை, வேலை செய்யும் மேஜை, அலமாரி போன்றவற்றை ஒழுங்கமைக்கலாம். நகங்களை வெட்டுதல், முடி வெட்டுதல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT