Another name for luck is superstition
Another name for luck is superstition 
வீடு / குடும்பம்

அதிர்ஷ்டம் என்பதற்கு மறுபெயர் மூடநம்பிக்கை என்பதை அறிவோம்!

பொ.பாலாஜிகணேஷ்

திர்ஷ்டம் என்பதற்கு உண்மையான பொருள் குருட்டுத்தனம் ஆகும். அதாவது, அதிர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள். அதிர்ஷ்டம் என்றால், ‘பார்வையின்மை, குருட்டுத்தனம்’ என்று பொருளாகும். அதிர்ஷ்டத்தை நம்பி, மனிதர்கள் பலரும் சோம்பேறிகளாகி வருவதை தற்காலத்தில் காண்கிறோம். அறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மூடநம்பிக்கையே அதிர்ஷ்டம். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், அதுவே அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அதுவே  மூடநம்பிக்கை.

இங்கிலாந்து நாட்டின் மன்னர் மூன்றாம் ஜார்ஜ், நாட்டு மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை அறிய விரும்புவார். இதற்காக அவர் அடிக்கடி மாறு வேடத்தில் சென்று நாட்டின் நிலைமையைக் கண்டு வருவார்.

ஒருசமயம் நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க மன்னர் ஆசைப்பட்டார். விருந்தோடு மக்கள் பார்த்து இன்புற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். இதை முறைப்படி மக்களுக்கு அறிவிக்கவும் செய்தார். மன்னர் கொடுக்கும் விருந்துக்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். ஊரே காலியாக இருந்தது. மக்களே இல்லாத ஊரினைக் காண, மன்னர் குதிரையில் மாறு வேடத்தில் வந்தார்.

அப்போது, ஒரே ஒரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்பெண்ணைப் பார்த்த மன்னர், “பெண்ணே, ஊரே காலியாக உள்ளது. எல்லோரும் எங்கே சென்று உள்ளார்கள்'' எனக் கேட்டார்.

வேலையில் தனது முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தனது பார்வையை திருப்பாமலேயே, “மன்னர் திடீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். மேலும், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு பரிசுப் பொருளினையும் வழங்க உள்ளாராம். எல்லோரும் அதிர்ஷ்டத்தை நம்பி அங்குச் சென்றுள்ளனர்” என்று கூறினார்.

இதனைக் கேட்ட மன்னர், “நீ போகவில்லையா? உனக்கும் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதே” என்றார். வேலையைச் செய்துகொண்டே அந்தப் பெண் அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேனே இந்த வேலைக்கான கூலி நிச்சயம் எனக்குக் கிடைக்கும். விருந்துக்குப் போனால் இன்றைய நாளினை நான் எனது வாழ்நாளில் இழந்ததாகக் கருதுகிறேன். அதோடு, இன்று வேலை செய்த கூலியையும் இழந்து விடுவேன். எனது குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்தும் நான் தவறி விடுவதாகக் கருதுகிறேன். எனவே, நான் விருந்துக்குச் செல்லவில்லை” என்றாள் அந்தப் பெண்.

இதனைக் கேட்ட மன்னர் வியப்புற்று, “பெண்ணே! அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து மன்னரைத் தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. உன் உழைப்புதான் அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது” என்று பாராட்டி பரிசுகள் பலவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

மக்கள் அற்ப சுகம் தரும் அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாறாமல், அறிவுபூர்வமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு முயற்சியிலும் அதிக கவனம் செலுத்தி, நல்ல சிந்தனைகளுடன் கூடிய உழைப்பைத் தந்தால், அது நல்ல பலனை நிச்சயம் கொடுக்கும்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

SCROLL FOR NEXT