ஒற்றை குழந்தை பெற்றோருடன் https://mkfeuhrer.medium.com
வீடு / குடும்பம்

ஒற்றைக் குழந்தையின் சிறப்பியல்புகளும்; எதிர்கொள்ளும் சிக்கல்களும்!

ஆர்.ஐஸ்வர்யா

ற்போது ஒற்றைக்குழந்தை கொண்ட குடும்பங்கள் அதிகமாகி வருகின்றன. பலவித காரணங்களுக்காக ஒரு குழந்தை மட்டும் போதும் என பெற்றோர்கள் தீர்மானிக்கிறார்கள். குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதார ரீதியான சிரமங்கள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் செலுத்த வேண்டிய கவனம், பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வது போன்ற சில காரணங்களால் ஒற்றை குழந்தை முறை நிறைய குடும்பங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஒற்றைக் குழந்தைக்கு கிடைக்கும் சலுகைகளும், அது எதிர்கொள்ளும் சவால்களும் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கிடைக்கும் சலுகைகள்:

100 சதவிகித பாசம்: பெற்றோர்கள் தங்கள் ஒற்றைக் குழந்தையின் மீது தங்களுடைய நூறு சதவிகித பாசத்தைக் கொட்டுவார்கள். அது மட்டுமல்ல, தன்னுடைய நேரம், ஆற்றல் அனைத்தையும் அந்தக் குழந்தையின் மீது செலுத்தி மிகுந்து கவனத்தோடு வளர்ப்பார்கள். அதன் தனிப்பட்ட மேம்பாட்டில் மிகுந்த கவனம் மற்றும் அக்கறை செலுத்துவார்கள். அந்தக் குழந்தையும் பெற்றோரிடம் மிகுந்த ஒட்டுதலோடும் பாசத்தோடும் இருக்கும்.

சிறந்த கல்வி: பொருளாதார ரீதியாக தாங்கள் சிரமப்பட்டால் கூட ஒற்றை குழந்தையாக இருந்தால் அவர்களை மிகச் சிறந்த பள்ளியில் படிக்க வைப்பார்கள். தேவைப்பட்டால் சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்புவார்கள். உயர்தரமான கல்வியைத்  தரத் தயங்க மாட்டார்கள்.

சுதந்திரம்: ஒற்றைக்குழந்தை என்பதால் நிறைய சுதந்திரம் அதற்குக் கிடைக்கும். தனிமையில் அதிக நேரம் செலவழிப்பதால் தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதோடு சுதந்திரப் போக்கும் வளரும்.

மன முதிர்ச்சி: உடன் பிறந்தவர்கள் இல்லாததால் ஒற்றைக் குழந்தை எப்போதும் பெரியவர்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் அதிகமான மன முதிர்ச்சியுடன் விளங்கும். இது மேம்பட்ட சமூக திறன்களுக்கு வழிவகுக்கும்.

தன்னம்பிக்கை: தன்னுடைய பிரச்னைகளை தானே தீர்த்துக் கொள்ளும் வல்லமை பெற்றவராக இருப்பதும், சிறந்த முடிவு எடுக்கும் தேர்ச்சி பெற்றும் விளங்குவதும் ஒற்றைக் குழந்தையின் சிறப்பியல்பு.

அமைதி: உடன் பிறந்தவர்கள் இல்லாததால் வீடு, சண்டை சச்சரவு இன்றி எப்போதும் அமைதியாக இருக்கும். இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். வீட்டில் அமைதி நிலவுவதால் நல்ல கவனத்துடன் படிக்கவும், செய்யும் வேளையில் கவனம் செலுத்தவும் முடிகிறது.

படைப்பாற்றல்: உடன் விளையாட அக்கா, தம்பி, தங்கை இல்லாததால் அவர்கள்  படைப்பாற்றலில் சிறந்து விளங்குவார்கள். ஓவியம் வரைதல், கதை எழுதுதல், இசைக்கருவிகள் வாசித்தல், கிராஃப்ட் வேலை செய்தல் என்று சிறந்து விளங்குவார்கள்.

பாதிப்புகள்:

தனிமை: உடன் பிறந்தவர்கள் இல்லாததால் எப்போதும் தனிமையை அனுபவிப்பார்கள். அதிலும் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால் தனிமையுணர்வு அதிகமாக இருக்கும். தங்களுடைய அனுபவங்கள் சந்தோஷங்களை பகிர்ந்துகொள்ள அக்கா, அண்ணா, தம்பி இல்லை என்று ஏங்குவார்கள்.

அழுத்தம்: ஒற்றைக் குழந்தையாக இருப்பதனால் பெற்றோரின் அதீத எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முயற்சியில் அதிக மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.

அனுசரித்துப் போவதில் சிக்கல்: விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலே வளந்திருப்பார்கள். அதனால் வெளியிலோ, அலுவலகத்திலோ பள்ளியிலோ, பிறருடன் கலந்து பழகுவது, அட்ஜஸ்ட் செய்து போவது என்பது போன்ற குணங்கள் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் அல்லது அனுசரித்துப் போவதில் சிக்கல்கள் இருக்கும்.

பொறுப்புணர்வு: வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் ஒற்றைக் குழந்தைக்கு நிறைய பொறுப்புணர்ச்சி இருக்கும். உடன் பிறந்தவர்கள் இருந்தால் அவர்களுடன்  வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளலாமே என ஏங்குவார்கள். ஆனால், இவர்கள், தான் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

உடன்பிறப்பின் பாசம்: உடன் பிறந்தவரின் பாசத்தை அனுபவிக்காமல் அந்த அன்பு எப்படிப்பட்டது என்றே தெரியாமல் வளருவார்கள். இது சமூக மேம்பாட்டிற்கும், பிறரிடம் வெளிப்படுத்தக் கூடிய தோழமை உணர்வும் குறைவாகவே இருக்கும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT