Laughter therapy 
வீடு / குடும்பம்

மனம்விட்டு சிரிப்பதன் மருத்துவ மகத்துவம் தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது பழமொழி. இது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மைதான் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். பல் தெரிய சிரிப்பதை விட வாயாற சிரிப்பதுதான் உடலுக்கும், மனதிற்கும் நன்மைகள் தரும் என்கிறார்கள் ஜப்பானிய மனோதத்துவ ஆராய்ச்சியாளர்கள். ‘நாம் வாய்விட்டு சிரிக்கும்போது ஒரு வகை மின் அதிர்வுகள் நம் உடல் முழுவதும் பரவுகிறது. இவை, உடல் சுரப்பிகளின் செயல்பாட்டை தூண்டி விடுகின்றன . இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. இதயத்திற்கும், வயிற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றன. இதனால் சுறுசுறுப்பாக புத்துணர்வோடு நாம் செயலற்ற முடியும் என்கிறார்கள்.

‘மன இறுக்கத்தையும், நோய்களையும் சரி செய்ய உரக்க சிரியுங்கள்’ என்கிறார்கள் சிகாகோவில் உள்ள செயின்ட் லூயிஸ் மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள். உரக்க சிரிப்பதால் அதிகளவு ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறோம். இதனால் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், எலும்பு இணைப்புகள் ஒரு முறை மசாஜ் செய்து விட்டது போல புத்துணர்ச்சி பெறுகின்றன.

உரக்க சிரிப்பதால் எண்டோர்பின் எனும் அமில உற்பத்தி நமது உடலில் அதிகமாகிறது. இந்த அமிலம் உடல் வலி மற்றும் நோய்களால் ஏற்படும் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. இது உடலில் அனைத்து பகுதிகளிலும் பரவுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடலில் எந்த பகுதியில் நோய் இருந்தாலும் டி-லைம்போசைட்ஸ் எனும் பொருளைத்தான் உடல் பயன்படுத்தி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நாம் உரக்க சிரிக்கும்போது இந்த டி-லைம்போசைட்ஸ் எனும் பொருளின் செயல் திறனும் அதிகரிக்கிறது. இது குறைவதால் கார்டிசோல் எனும் ஹார்மோன் இரத்தத்தில் அதிகம் கலந்து உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சக்தியை குறைக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க தியானம் செய்வது போல தினமும் 20 நிமிடங்கள் வீட்டிலேயே உரக்கச் சிரியுங்கள். மனம் விட்டு சிரிக்கும் போது மூளைக்கு அதிக இரத்தமும், குளுக்கோசும் செல்வதால் நரம்பு தொடர்பான சீரழிவு மற்றும் பக்கவாத பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. பக்கவாத நோய்க்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்பதை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.

மனம் விட்டு சிரிப்பது பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டது என்பது தெரிந்ததுதான். அது உங்களின் கண்களின் ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது என்பதை பெல்பாஸ்ட் பல்கலைக்கழகமும், சீனாவின் சூன் வாட்சன் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கிறவர்கள், அலுவலகங்களில் அதிக நேரம் ரிக்கார்டு ஒர்க் பார்க்கின்றவர்களின் மிகப்பெரிய குறைபாடு அவர்களின் கண்கள் அடிக்கடி உலர்ந்து போவதுதான். இது நாளடைவில் வேறு பெரிய கண் குறைபாடுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். இதனைத் தவிர்க்க வேலை செய்யும்போது இடை இடையே மனம் விட்டு சிரியுங்கள். அவ்வப்போது மனம் விட்டு சிரிப்பதன் மூலம் கண்கள் உலர்ந்து போவதை தவிர்க்க முடியும். இது கண்கள் உலர்ந்து போகாமல் இருக்க கண் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கண் சொட்டு மருந்தை விட வீரியமானது என்கிறார்கள். அதேவேளையில் வேலை செய்யும்போது அவ்வப்போது மனம் விட்டு சிரிப்பது மன ஆற்றலையும் மேம்படுத்தும் என்கிறார்கள்.

4 அரசர்கள் சேர்ந்து கட்டிய 4 கோபுரங்கள் கொண்ட பிரம்மாண்ட கோயில் எது?

யோகி பாபுவிடம் காமெடியே இல்ல – நடிகர் ரமேஷ் கண்ணா!

News 5 – (28.09.2024) ‘வானில் இரண்டு நிலவுகள்’ - நாசா அறிவிப்பு!

ஶ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த உத்தவ கீதை!

வெற்றிக்குத் தேவை திறமையே!

SCROLL FOR NEXT