கண்டிப்பான பெற்றோர் 
வீடு / குடும்பம்

கண்டிப்பான பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் 9 பாதிப்புகள்!

ம.வசந்தி

குழந்தைகளிடம் பெற்றோர்கள் கடுமையாக நடந்துகொள்வதால், அது குழந்தைகளிடையே எதிர்மறை விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கடுமையான பெற்றோராக இருந்தால், அது என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. படிப்பில் குறைவது: உங்கள் குழந்தைகள் படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தால், அந்த அழுத்தம் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தோல்வி பயம், தண்டனை, ஒப்பீடு மற்றும் அவமானம் போன்ற எண்ணங்களை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்குகிறார்கள். கற்றல், கல்வி மற்றும் பள்ளி குறித்த எதிர்மறை எண்ணங்களை இது ஏற்படுத்துகிறது.

2. அதிகரிக்கும் அச்ச உணர்வு: அதிகளவில் பெற்றோர் கண்டித்தால், அது அவர்கள் மீது தொடர்ந்து மன அழுத்த சூழலை உருவாக்குகிறது. இதனால் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு, அது அச்சம், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. இது குழந்தை தொடர்ந்து, தவறுகளை செய்துவிடுவோம் என்ற பதற்றத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது.

3. மன அழுத்தப் பிரச்னைகள்: தோற்றுவிடுவோமோ என்ற பதற்றத்தில் அவர்கள், கடுமையான பெற்றோரால் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களுக்கு நாள்பட்ட மன அழுத்தம் ஏற்படுகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்படும்போது அது உடல் நலனையும் பாதிக்கிறது.

4. முடிவெடுக்கும் திறன் இல்லாதது: கடுமையான அல்லது குழந்தைகளை அதிகம் பாதுகாக்கும் பெற்றோர் என்றால், அவர்கள் தங்கள் குழந்தைகளை முடிவெடுக்க அனுமதிப்பதில்லை. இது அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை நீண்ட காலத்துக்கு பாதிக்கிறது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போதும், பிரச்னைகளை தீர்க்கும்போதும் ஏற்படும் திறன் குறைபாடுகள், அவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. மாறாக, குழந்தைகளை தவறுகள் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் அவற்றில் இருந்துதான் கற்க முடியும்.

5. சமூக திறன்கள் குறைபாடு: உங்கள் குழந்தையை தொடர்ந்து ஒப்பிட்டுக் கொண்டே இருப்பது தன்னம்பிக்கையை குறைக்கும் செயல்களுள் ஒன்றாகும். இதனால்அவர்கள் மற்றவர்களை விட தங்களை குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.இது அவர்களின் சமூகத்திறன் வளர்ச்சியை பாதிக்கிறது. இது குழந்தைகள் நட்பு மற்றும் உறவுகளை வளர்ப்பதிலும் அதை பராமரிப்பதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

6. முரட்டுத்தனம் அதிகரிக்கும்: உங்கள் குழந்தைகளை நீங்கள் அதிகம் கட்டுப்படுத்துவதால் அவர்கள் தங்களின் உணர்வுகளை எப்படி சரியான முறையில் கையாள்வது என்பதை பற்றி அறியாமல் அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் விரக்தியை ஏற்படுத்தி  முரட்டு குணம் கொண்டவர்களாக மாற்றி, கோபத்தை உண்டாக்குகிறது.

7. எதிர்க்கும் குணம் மற்றும் போராட்டம்: முரட்டு குணம் மற்றும் கோபம் ஆகிய அனைத்தும், அவர்களை கலகம் செய்பவர்களாக மாற்றி, அவர்கள் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதற்கு அப்படியே எதிர்மறையாக செயல்படத் தூண்டுகிறது. இந்த கலக குணம், பல வழிகளில் அவர்களிடம் இருந்து வெளிப்படும். குறிப்பாக, முடியின் நிறத்தை மாற்றிக் கொள்வது, வேண்டுமென்றே பள்ளியில் கெட்ட பெயர் வாங்குவது, டாட்டூ, பியர் சிங் செய்வது, பெற்றோர் நினைக்கும் எதையுமே கற்றுக்கொள்ள மறுப்பது ஆகியவையாகும்.

8. அவர்களின் கிரியேட்டிவிட்டி குறையும்: பெற்றோர்,  குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்வதால் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி  திறன் குறைகிறது. இது அவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் திறனையும், எழுத்து மற்றும் பேச்சுத்திறனையும் பாதிக்கும். இதனால் குழந்தைகள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள்.

9. பெற்றோர் - குழந்தைகள் உறவு பாதிக்கும்: நீங்கள் கடுமையான பெற்றோராக இருந்தால் அது உங்கள் பெற்றோர் - குழந்தைகள் உறவை கடுமையாக பாதிக்கும். இதனால், அவர்கள் சுமூகமாக பழக மாட்டார்கள். பெற்றோர் குழந்தைகளை புரிந்துகொள்வதில், அனுதாபம் கொள்வதில் சிக்கல் ஏற்படும். அவர்களிடையேயான மனக்கசப்பு ஆண்டு முழுவதும் தொடரும். ஒரு கட்டத்தில் அது வெறுப்பாக மாறிவிடும். இறுதியில் குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதையே நிறுத்திக்கொள்வார்கள். அனைத்து பிணைப்புகளையும் துண்டித்துவிடுவார்கள். இன்றைய குழந்தைகளிடம் பெற்றோர்கள் அளவான கண்டிப்போடு, அதீத பாசத்தை வெளிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT