Happy life 
வீடு / குடும்பம்

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

ஆர்.வி.பதி

ற்காலத்தில் பலரும் குறைந்த வருமானத்திலேயே குடும்பத்தை நடத்த வேண்டி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாதத்தையும் நகர்த்த அவர்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இன்னும் சிலர் கை நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரும்கூட பெரும் சிரமத்துடனேயே ஒவ்வொரு மாதத்தையும் நகர்த்த வேண்டிய நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். காரணம், கைநிறைய சம்பாதிப்பதால் சம்பாதிக்கும் பணத்தை திட்டமிடாமல் செலவிடுவதே இதற்கு முதல் காரணமாக இருக்கும். குறைவாக சம்பாதித்தாலும் நிறைவான வாழ்க்கை வாழலாம். எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் பரவாயில்லை, சம்பளம் கைக்கு வந்ததும் முதலில் அதிலிருந்து பத்து சதவிகிதத்தை சேமிப்புக்கென ஒதுக்கி விடவேண்டும். இதை ஒவ்வொரு மாதமும் உங்கள் முதல் செலவு என்று நினைத்துக்கொள்ள வேண்டும். அந்த சேமிப்பையும் அஞ்சலகம் மற்றும் நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகளில் சேமியுங்கள். பணம் பாதுகாப்பாக இருக்கும்.

எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன்பு, ‘அது நமக்கு அவசியம் தேவைதானா?’ என்பதை ஒரு முறைக்கு பத்து முறை சிந்தித்து, பின்னர் அது அவசியம் தேவை என்றால் மட்டுமே வாங்க வேண்டும். எப்போதாவது சில சமயங்களில் மட்டும் தேவைப்படும் பொருள் என்றால் வாங்கவே கூடாது.

செய்தித்தாள், வார இதழ்களை நூலகங்களுக்குச் சென்று வாசிக்கப் பழக வேண்டும். புத்தகங்களை வாடகைக்குத் தரும் லெண்டிங் லைப்ரரியில் சேர்ந்து நூல்களையும், வார இதழ்களையும் வாசிக்கலாம். இதனால் கணிசமான தொகை மிச்சமாகும்.

தேவையின்றி மோட்டார் சைக்கிளில் செல்லாதீர்கள். அருகிலுள்ள இடங்களுக்கு நடந்து செல்லும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதனால் பெட்ரோல் செலவினை கணிசமாக மிச்சம் பிடிக்கலாம். பேருந்தை விட, ரயில் கட்டணம் குறைவு. முடிந்த மட்டும் ரயிலில் பயணியுங்கள்.

தேவையின்றி பலர் ஓட்டலுக்குச் சென்று சாப்பிடும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இதை முதலில் தவிர்க்கப் பழக வேண்டும். உடல் நலனும் மேம்படும். பணமும் வீணாகாது. எக்காரணம் கொண்டும் பிறர் பாராட்ட வேண்டும் என்று வாழாதீர்கள். பணமின்றி சிரமப்படும்போது அவர்கள் எவரும் உங்களுக்கு உதவப்போவதில்லை.

முடிந்த மட்டும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். அப்படியே வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படும்போது வங்கியில் கடன் வாங்குங்கள். உங்கள் நகைகளை வங்கியில் அடமானம் வைத்துப் பணம் பெறலாம். வங்கிகளில் வட்டியும் குறைவு. மாதாமாதம் ஒரு தொகைச் செலுத்தி நகையை மீட்டுக்கொள்ளலாம்.

எந்தக் கடையில் மளிகை முதலான பொருட்கள் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கிறது என்பதைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே வாங்குங்கள். வீட்டில் தேவையின்றி மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள். மின்சாரத்தை சேமிக்கும் எல்இடி பல்புகள் முதலான உபகரணங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கலாம்.

இரண்டு மொபைல் இணைப்புகளை தவிர்த்து விடுங்கள். ஒரே ஒரு இணைப்பு போதும். இதனால் கணிசமான தொகை மிச்சமாகும். வீட்டில் ஒரு வைஃபை இணைப்பைப் பெற்று வீட்டில் உள்ள அனைவரும் அதைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறலாம். இதன் மூலமும் பணம் கணிசமான அளவில் மிச்சமாகும்.

இவற்றையெல்லாம் அன்றாட வாழ்வில் கடைபிடித்துப் பாருங்கள். பணமும் மிச்சமாகும்; வாழ்க்கையும் சுலபமாகும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT