கையால் உணவு சாப்பிடும் குழந்தை 
வீடு / குடும்பம்

கையால் சாப்பிடுவதில் இத்தனை நன்மைகளா?

பொ.பாலாஜிகணேஷ்

ம்மில் பலர் வீட்டிலேயே ஸ்பூனால் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இதை நாகரிகம் என்று கூறிக்கொள்கிறார்கள். உணவை கையால் எடுத்து சாப்பிடுவதை கௌரவ குறைச்சலாக நினைப்போர் நம்மில் பலர் உண்டு. கையால் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், ஏன் கையால் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

டேபிளில் அமர்ந்து ஸ்பூன், ஃபோர்க் பயன்படுத்திச் சாப்பிடும் மேற்கத்திய நாட்டினர் நாம் கையால் சாப்பிடுவதை நாகரிகக் குறைச்சலாகப் பார்க்கிறார்கள். நம்மூர் ஸ்டார் ஹோட்டல்களிலும் ஸ்பூன் வைத்து சாப்பிடுவதே நடைமுறை ஆகிவிட்டது. அப்படியானால், கையால் உணவை எடுத்துச் சாப்பிடுவது நாகரிகம் இல்லையா?

‘அப்படிக் கிடையாது’ என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். ‘சாப்பிட ஸ்பூன் பயன்படுத்தும் வழக்கம் தோன்றி சுமார் 300 ஆண்டுகள்தான் ஆகிறது. ஒவ்வொரு நாட்டிலும் சாப்பிடும் முறைக்கு அவர்களின் உணவுப் பழக்கமும் தட்ப வெப்ப நிலையுமே காரணம். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சூப், வேகவைத்த காய்கறிகள், சாலட், இறைச்சி என்று சாப்பிடுகிறார்கள். இதற்கு ஸ்பூன், கத்தி, ஃபோர்க் போன்றவையே வசதி. கையால் சாப்பிட்டால் அடிக்கடி கைகழுவ வேண்டும். குளிர் நாடுகளில் பனிக்கட்டி போல ஜில்லிடும் தண்ணீரில் கைகழுவுவது கஷ்டம். அதனால் அவர்கள் ஸ்பூன் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்று எதுவும் கிடையாது. இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் என்று பெரும்பாலான இடங்களில் மக்கள் கைகளால்தான் சாப்பிடுகிறார்கள்.

சாம்பார் ஊற்றி, சாதத்தைப் பிசைந்து, அதில் பொரியலைச் சேர்த்துக் கைகளால் மட்டுமே சாப்பிட முடியும். ரசம் சாதத்தில் அப்பளத்தை நொறுக்கிப் போட்டுச் சாப்பிடுவது, தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்வது, தோசை, சப்பாத்தி சாப்பிடுவது என்று எல்லாமே கைகளால்தான் சாத்தியம். ஹோட்டலில் கூட ஸ்பூன்கள் எவ்வளவு சுத்தமாக இருக்கும் என்பது தெரியாது. டேபிளில் வைத்திருப்பார்கள். யார் யாரோ தொட்டிருக்கலாம். கீழே விழுந்து எடுத்து வைத்திருக்கலாம். நம் கைகளை நன்றாகக் கழுவிக்கொண்டு சாப்பிடும்போது, சுகாதாரமாகச் சாப்பிடுகிறோம் என்ற உணர்வு ஏற்படும்.

நம் பண்பாட்டில் உணவு என்பது ஐம்புலன்களுக்கும் தொடர்புடையது. உணவு சமைக்கும் ஓசையைக் கேட்டு, உணவின் வாசனையை நுகர்ந்து, அதைக் கண்களால் ரசித்து, கைகளால் எடுத்து உணர்ந்து, வாயில் போட்டு ருசித்துச் சாப்பிட வேண்டும்.

கைகளால் சாப்பிடுவதில் பல நன்மைகள் உள்ளன. இது செரிமானத்தைத் தூண்டிவிடும். நரம்பு முடிச்சுகள் நம் விரல்களில் உள்ளன. கைகளால் உணவைப் பிசைந்து சாப்பிடும்போது, உணவு செரிமானம் இயல்பாகத் தூண்டப்படுகிறது.

தரையில் உட்கார்ந்து, கால்களைச் சம்மணமிட்டு அமர்ந்து, கைகளால் உணவை எடுத்துச் சாப்பிடும்போது பசி உணர்வு சீக்கிரமே அடங்குகிறது. சாப்பிட்டு முடித்த முழுமையான உணர்வும் நமக்குக் கிடைக்கிறது. அதேபோல், கைகளால் சாப்பிடும்போது. நமக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியும். அதனால் சரியான அளவில் சாப்பிடுவோம். அதிகம் சாப்பிட்டு அவதிப்பட மாட்டோம். கைகளால் பிசைந்து சாப்பிடும்போது, நன்றாக உணவை மென்று சாப்பிடுவோம். நிதானமாகவும் சாப்பிடுவோம். இதுவே சரியான சாப்பிடும் முறை. நோய்களைத் தவிர்ப்பதற்கு இப்படிச் சாப்பிடுவதே நல்லது.

கைகளால் உணவை எடுத்துச் சாப்பிடும்போது, கண்களுக்கும் கைகளுக்கும் நல்ல தொடர்பு இருக்கும். உணவு சூடாக இருக்கிறதா, காரம் அதிகமா என்பதையெல்லாம் உணர்ந்து சாப்பிட முடியும். இதனால் வயிறு மட்டுமின்றி, மனமும் நிறையும்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT