மனப்பக்குவம் பெற்ற மனிதர் https://tamil.lifie.lk
வீடு / குடும்பம்

மனம் பக்குவம் பெற இந்த 6 வழிகள் போதும்!

சேலம் சுபா

வாழ்க்கையில் பல இன்பங்களை அனுபவித்து வெற்றி பெற்ற மனிதராக மகிழ்ந்தாலும், முதிர்ச்சி இல்லாமல் இருந்தால் அதாவது மெச்சூரிடி எனப்படும் பக்குவம் இல்லாமல் இருந்தால் மனதில் நிம்மதி இருக்காது.

ஒருசிலர். 'இந்த உலகத்தில் எது வேண்டுமானாலும் தன்னைச் சுற்றி நிகழட்டும் எனக்கென்ன?’ என்ற ரீதியில் சலனமற்று இருப்பார்கள். அவர்களைப் பார்த்தால் மற்றவர்கள், 'என்ன ஒரு மெச்சூரிடி அவருக்கு' என்று புகழ்வார்கள். இந்த முதிர்ச்சி என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். ஏனெனில் அவரவரின் வளர்ப்பு சூழல், நட்பு சூழல் போன்றவை முதிர்ச்சியை தருவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர் இருக்கும் வீட்டில் அந்த குழந்தையின் மெச்சூரிடி தன்மை குறைவாகவே இருக்கும். அதே ஆன்மிக வழியில் நல்ல கருத்துக்களை சொல்லி வளர்க்கும் தாத்தா பாட்டியிடம் வளரும் குழந்தையின் மெச்சூரிட்டி தன்மை என்பது சற்று அதிகமாகவே இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள இந்த மெச்சூரிட்டி நமக்கு உதவுகிறது.

சரி, இந்த மெச்சூரிட்டி நமக்கு வர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இதோ இந்த ஆறு வழிகளைப் பின்பற்றினால்போதும் நம் மனதை மெச்சூரிட்டியாக ஆக்கலாம்.

1. யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் (Accept Reality): நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளையும், நம்மால் என்ன செய்ய முடியும் என்ற நிலையையும் அப்படியே ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து ஆசைப்படுவதைத் தவிர்த்து நமது வாழ்வின் உண்மைத்தன்மையை ஏற்க பழக வேண்டும்.

2. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள் (Control Your Emotions): சிலர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தத் தெரியாமல் அதை சட்டென்று வெளியிடுவார்கள். எந்த நேரம், எந்த சூழல் என்று பார்க்காமல் நமது உணர்ச்சிகளை வெளியிடும்போது நம் மீது தேவையற்ற ஒரு இமேஜ் குத்தப்படுகிறது. கோபமோ, மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் நம் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது.

3. விரைவாக தீர்ப்பு தர வேண்டாம் (Don't Judge Too Early): ஒருசிலர் எது நடந்தாலும் இருபுறமும் தீர விசாரிக்காமல் இவர் சரியில்லை, அது சரியில்லை, இது சரி என்று தீர்ப்பு வழங்கி விடுவார்கள். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதனால் வரும் பின்விளைவுகள் அதிகம். ஆகவே. நன்கு சிந்தித்து சற்று நேரம் எடுத்து முடிவு செய்ய வேண்டியது அவசியம்.

4. உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் (Take Care of Your Mental Health): நாம் பக்குவப்பட்ட நிலை அடைய வேண்டுமெனில் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. போட்டி, பொறாமை, ஈகோ போன்ற கேடான சிந்தனைகளை மனதில் வளர்த்து மனதை பாதிக்கச் செய்வது வாழ்க்கை முழுவதும் வேதனை தரும்.

5. முட்டாள்தனமான சண்டைகளில் அமைதியாக இருங்கள் (Be Silent Over Nonsense Fights): சிலர் எப்போதும் அடுத்தவர் சண்டைகளில் தேவையின்றி மூக்கை நுழைத்து அவமானப்படுவார்கள். நமக்கு பிரயோஜனமற்ற சண்டைகளில் தலையிடாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

6. மகிழ்ச்சிக்காக மற்றவர்களை சார்ந்து இருக்காதீர்கள் (Don't Depend on Others for Happiness): இது மிகவும் முக்கியமானது. நம் மகிழ்ச்சி நம்மிடம் மட்டுமே. மற்றவரால் பறிக்க முடியாதது கூட. அடுத்தவர் மூலம் பெறும் மகிழ்ச்சி என்பது மின்மினிப் பூச்சி போல நிமிடத்தில் மறையும். வெளியே என்ன நடந்தாலும் மனதில் இருக்கும் நம் மகிழ்ச்சி நிரந்தர பக்குவத்தைத் தரும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT