Pongal 
வீடு / குடும்பம்

பொங்கல் சாப்பிட்டால் ஏன் தூக்கம் வருகிறது தெரியுமா?

மணிமேகலை பெரியசாமி

காரசாரமாக வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க, எங்கிருந்தோ ஒரு மூலையில் கார் ஓட்டுவதுபோல குறட்டை சத்தம் வந்து கொண்டிருந்ததது.  வகுப்பறையில் உள்ள அனைவரின் கவனமும் சத்தம் வந்த பக்கம் திரும்பியது. அங்கு, ரூபன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தான். அதை கவனித்த ஆசிரியர், பக்கத்தில் இருக்கும் மாணவனை விட்டு ரூபனை எழுப்பச் சொன்னார். திடுக்கிட்டு எழுந்த ரூபன், அனைவரின் கவனமும் தன்னை நோக்கி இருப்பதைக் கண்டு வெட்கிப் போனான். ஆசிரியர், "என்ன ரூபன், இன்னைக்கு உங்க வீட்டுல பொங்கலா" என்று சிரித்தப்படியே கேட்டார். அவனும் தன் வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலை வைத்து தலையை சொரிந்தபடி, "ஆமாம் மிஸ்" என்றான். "சரி சரி போய் முகத்தை கழுவிவிட்டு வந்து கிளாச கவனி" என்று கூறி மீண்டும் பாடம் நடத்த ஆரம்பித்தார் ஆசிரியர்.

இதுபோன்று, பலரும் காலை உணவாக பொங்கல் சாப்பிட்டு, வகுப்பறையில் தூங்கி விழுந்திருப்போம். அல்லது தூக்கத்தை கட்டுப்படுத்த நினைத்து செய்வதறியாது முழி பிதுங்கியிருந்த அனுபவத்தை வாழ்வில் ஒருமுறையாவது பெற்றிருப்போம்தானே.

பொங்கல் சாப்பிட்டால் ஏன் இவ்வாறு தூக்கம் வருகிறது என்று என்றைக்காவது அதை பற்றி நீங்கள் யோசித்தது உண்டா? அதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பொதுவாக, பொங்கலானது அரிசி, நெய் அல்லது சமையல் எண்ணெய், சிறுபருப்பு, முந்திரி மற்றும் மிளகு, சீரகம் போன்ற மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைக்கப்படுகிறது.  அதில் அரிசி, சிறுபயிறு ஆகிய இந்த இரண்டும்தான் நமக்கு தூக்கம் வருவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதெப்படி?

அரிசியில் கார்போஹைட்ரேட் இருப்பது நமக்குத் தெரிந்ததே. இதை வேகவைத்து சூடாக சாப்பிடும் போது அது எளிதில் செரிமானம் ஆகிவிடுவதால் நமது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யும்.  இன்சுலின் அளவு அதிகரிக்கும் பொழுது, நம்மை ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ளும் ஓரெக்சின் (Orexin) ஹார்மோனின் அளவு குறையத் தொடங்கிவிடும். இதனாலேயே, நமக்கு மந்த நிலை ஏற்படும்.

இதுபோக, இன்சுலின் அதிகமாகும் போது, மூளையின் ஹைபோதலாமஸில் உள்ள MCH (Melanin-concentrating hormone) ஹார்மோன் ரிலீஸ் ஆகி நம்மை தூங்க வைக்கிறது. 

சிறுபயிரில் Triptophan என்ற அமினோ ஆசிட் உள்ளது. Triptophan அமினோ ஆசிட் உள்ள பொருள்களை, அரிசி போன்ற கார்போஹைட்ரெட் நிறைந்த பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது, Triptophan அளவு கொஞ்சம் அதிகரித்து, செரட்டோனின் ஹார்மோன் உற்பத்திக்கும், தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும்  மெலட்டோனின் ஹார்மோன் உற்பத்திக்கும் வழிவகுக்கிறது.  இதனால்தான், பொங்கல் சாப்பிட்டால் நமக்கு தூக்கம் வருகிறது.

ஏன்பா பொங்கல்… இது உனக்கே நியாமா இருக்கா.?

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT