வாழ்வில் நிம்மதியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நம் மனதுதான் தீர்மானிக்க வேண்டும். நம் மனதை ஒருநிலைப்படுத்தினால் தானே நிம்மதி வந்துவிடும். இந்த சீன தத்துவஞானியின் கதை மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
“என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றானாம் ஒரு அரசன் ஞானியிடம்.
“உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா?” என்று கேட்டார்.
“ஞானி என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை; கள்வர் பயம் இல்லை; அதிக வரிகள் விதிப்பதில்லை; முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், என் மனதில் மட்டும் அமைதியே இல்லையே அது ஏன்? இந்த அரசு பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லையே…”
“அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்துவிடு” என்றார் அந்த ஞானி.
“எடுத்துக்கொள்ளுங்கள்” என்றான் மன்னன்.
“நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார் ஞானி.
“நான் எங்கேயாவது போய் ஏதாவது வேலை செய்துகொள்கிறேன்.”
“இந்த நேரத்தில் எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டுவா. நான் பிறகு வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன்” என்றார்.
“சரி...” என்றான் மன்னன்.
காலம் உருண்டோடியது. ஒரு ஆண்டு கழிந்துவிட்டது. ஒரு ஆண்டுக்கு கழிந்தபின் அந்த ஞானி அரசனை காண வந்த அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.
அவனுக்கு வந்த மகிழ்ச்சியை கண்ட ஞானி அவரை உபசரித்ததையும் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்துகாட்டியதை பார்த்ததும், “அதெல்லாம் கிடக்கட்டும்… நீ இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார் ஞானி.
“நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார் அரசர்.
“முன்பு நீ செய்து பணிகளுக்கும் இப்போது செய்து பணிகளுக்கு ஏதாவது வேறுபாடு உண்டா?” என்று கேட்டார் ஞானி.
“இல்லையே... அப்போது நான் மன அழுத்தத்துடன் இருந்தேன்” என்றார் அரசர்.
“இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?” என்று ஞானி கேட்டார்.
“இப்போது மன அழுத்தம் இல்லை... அப்போது அரசனாக இருந்தேன். இப்போது தங்கள் பிரதிநிதியாக இருக்கிறேன்...” என்றார் அரசர்.
“அப்போது நீ வந்து இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனது இல்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதிதான் என்று எண்ணுகிறாய். அந்த மனம்தான் அனைத்திற்கும் அடிப்படையே.
நான் என்ற எண்ணம் வரும்போது, அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்துகொண்டு வரும், இந்த உலகம் எனது இல்லை; இந்த உடல் எனது இல்லை; எனக்கு அளிக்கப்பட்ட இந்த உயிர் எனது அல்ல; எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடியே போய்விடும். இதே மனநிலையுவுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்” என்று கூறினர் ஞானி.
எப்பொழுதுமே நம் மனமும் இந்த ஞானி கூறியதுபோல் ஐம்புலங்களையும் அடக்கி நெறிப்படுத்தி நாம் வாழ்ந்தோம் என்றால் துன்பம் எங்கிருந்து வரும்? இதிலிருந்து தெரிகிறதா துன்பம் வருவதற்கு நம் மனதுதான் காரணம். நம் எண்ணங்கள்தான் காரணம். நான் என்ற எண்ணம்தான் காரணம்; அதனால் மன நிம்மதி கிடைக்க வேண்டும் என்றால் நம் மனதை ஒருநிலைப்படுத்தி, நம் மனதினை கட்டுக்குள் கொண்டுவந்து நம் வசப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வசந்தம்தானே வீசும்.