சமீபத்தில் என்னுடைய நண்பனுடன் மனஅழுத்தம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். உனக்கு என்னவெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது? என நான் அவனிடம் கேட்டபோது. என்னுடைய வேலை சரியில்லை. பணியிடத்தில் மேலாளர் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியவில்லை என புலம்பிக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் என்னுடைய அறிவுரை கூறும் மூளை அவனை இடைநிறுத்தி மன அழுத்தம் என்பது நாமே உருவாக்கிக் கொள்ளும் ஒரு விஷயம் என்பது உனக்குத் தெரியுமா? எனக் கேட்டேன். அவன் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.
ஆம் உண்மையிலேயே மன அழுத்தம் என்பது தானாக ஏற்படுவது அல்ல நாமே ஏற்படுத்திக் கொள்வது. நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதபோது அதை மன அழுத்தம் போல நாம் உணர்கிறோம். அதாவது நமக்கு பிடிக்காத, எதிர்பாராத விஷயங்கள் நமக்கு நடந்தால் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதபோது கஷ்டமாக இருக்கிறது.
இவை அனைத்துக்கும் நம்முடைய எண்ணங்கள்தான் காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் நான் சொல்வதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும். நாம் மன அழுத்தம் என நினைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் நம்முடைய உடல் நிலையை வெகுவாக பாதிக்கும். மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும். எனவே நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் விஷயங்கள் சார்ந்த எண்ணங்களை நாம் கட்டுப்படுத்துவது அவசியம். எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படவில்லை என்றால் நமது வாழ்வில் மிகப்பெரிய பிரச்சனையை அவை ஏற்படுத்திவிடும். ஒரு பிரச்சனையைப் பற்றி நாம் அதிகமாக சிந்தித்துக் கொண்டு மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டால், அது மனம் மற்றும் உடல் சார்ந்த பாதிப்புகளை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
இத்தகைய மனஅழுத்தத்தை நாம் சரியாகப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளிவருவதற்கான முயற்சியை சரியாக தேர்வு செய்து செயல்பட்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து மீள முடியும். அந்த பிரச்சனையிலிருந்து நாம் மீள்வதை ஒருமுறை மனதில் கற்பனையாக சிந்தித்து பார்த்தால், நிஜ வாழ்வில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியவரும்.
“எனக்கு மன அழுத்தம் உள்ளது. எனவே எதையும் என்னால் செய்ய முடியாது” என நினைக்கும் நம்முடைய எண்ணங்கள்தான், பல புதிய விஷயங்களை முயற்சிப்பதில் இருந்து நம்மை தடுத்து நிறுத்துகிறது. எனவே தவறான எண்ணங்களுக்கு இடமளிக்காமல், சரியான செயல்களில் மனதை திசை திருப்பி, மன அழுத்தம் தரும் பிரச்சினைகளில் இருந்து வெளிவர முயலுங்கள்.
நாம் முயற்சித்தால் எத்தகைய பிரச்சினைகளிலிருந்தும் நம்மால் வெளிவர முடியும் என்பதை ஆழமாக நம்பி செயல்படுங்கள்.