சமீபத்தில் நீண்ட நாள் கழித்து எனது நண்பர் ஒருவரிடம் பேச நேர்ந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பேசுகிறோம் என நினைக்கிறேன்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் எங்களுடைய உரையாடல் தொடர்ந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் ஏதோ ஒரு நிறைவு ஏற்பட்டது. ஒரு கடினமான உணர்விலேயே இருந்த என்னுடைய மனம், இந்த உரையாடலுக்குப் பிறகு இலகுவானது.
மனிதர்களை சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் எப்படியெல்லாம் மாற்றுகிறது.
மனிதனுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
இன்று எனக்கு உயிராய் இருப்பது, நாளை வேண்டாததாய் மாறலாம். நான் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கியது, சில காலம் கழித்து எனக்கு தேவைப்படலாம்.
இன்று என் மனதை ஆட்கொண்டிருப்பவர் மனதை, எதிர்காலத்தில் வேறு யாரேனு கவரலாம். அவர் நம்மை விட முக்கியத்துவம் வாய்ந்தவராக மாறலாம்.
சூழ்நிலைகள்.
தேவைகள்.
சூழ்நிலைகளுக்கேற்ற தேவைகள்.
சூழ்நிலைகளுக்கேற்ற, தேவைகளுக்கேற்ற முடிவுகள்.
முடிவுகளின் விளைவுகள்.
விளைவுகளின் பாதிப்புகள்.
பாதிப்புகளின் உணர்வுகள்.
இவை அனைத்தும் தான், ஒரு மனிதனின் இன்ப துன்பங்களை நிர்ணயம் செய்கிறது.
சூழ்நிலைகளைக் காரணம் காட்டி பிரிவு, முறிவு, கோபம், வெறுத்தல் என அனைத்தையும் ஒரு மனிதன் நமக்கு பரிசாக அளித்தாலும், உண்மையான உணர்வுகளுக்குத் தெரியும், நம் நினைவுகள் என்றும் கவிதைகள்தான் என்று…
ஒரு விஷயம் வேண்டாம் என்பதற்கு தான் காரணம் தேவையேயன்றி, வேண்டும் என்பதற்கு காரணம் தேவையில்லை.
சூழ்நிலைகள், தேவைகள், முடிவுகள், விளைவுகள், பாதிப்புகள், உணர்வுகள் என அனைத்திற்கும் அப்பாற்பட்டு சில விஷயங்கள் உங்களுக்கு மனநிறைவைத் தருமாயின், அதை அடைய நாம் நிச்சயம் முயல வேண்டும்.
ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படி இருப்பதில்லை. ஏதோ ஒரு பிரச்சனை வந்துவிட்டால் எதுவாக இருப்பினும் அதை விட்டு ஒதுங்கிவிடும் மனநிலையில் தான் இருக்கிறோம். நமக்கு பிடித்ததற்காகவே நம்மால் போராட முடியவில்லை என்றால், வேறு எதற்குதான் நாம் போராடி சாதித்து நம்மை நிரூபிக்கப் போகிறோம்? அப்படியே நிரூபித்தாலும் அது நமக்கு என்ன கொடுத்துவிடப் போகிறது?