Motivation Image pixabay.com
Motivation

சுனாமியிலே ஸ்விம்மிங் போடணும்னா இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நான்சி மலர்

‘சுனாமி’ வந்த பிறகு கடல் இருக்கும் திசைப்பக்கம் கூட தலை வைத்து படுக்கவே பயமாயிருந்தது. அதற்கு முன்பெல்லாம் அழகாக தோன்றிய கடல் அதன் பிறகு ஒருவித கிலியைக் கொடுத்தது. அதன் பின் கடல் இருக்கும் எந்த ஊருக்கு கூப்பிட்டாலும் போக மாட்டேன். வீட்டிலும் யாரையும் போகவும் விடமாட்டேன்.

இதனால் ஒருமுறை என்னிடம் எங்கே செல்கிறோம் என்பதை சொல்லாமலேயே என்னை வேளாங்கண்ணிக்கு கூட்டிச் சென்று விட்டார்கள். பாதி தூரத்தில்தான்  வேளாங்கண்ணிக்கு போகிறோம் என்று தெரிய வந்தது. அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. அங்கே போய்தான் ஆகவேண்டும் என்ற நிலை.

இருப்பினும் அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ‘திக் திக்' என்றிருந்தது. ஒருவேளை இப்போது சுனாமி வந்துவிட்டால் எப்படி தப்பிப்பது, என்னென்ன செய்ய வேண்டும் என்று படித்தது எல்லாம் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டு கடைசியாக கடலை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். எனக்கோ இதயம் வெடித்துவிடும் அளவிற்கு பயம். எனக்கு மட்டும் கடல் மட்டம் உயருவது போலத் தோன்றியது.  அங்கிருந்த எல்லோருமே மகிழ்ச்சியாகவே விளையாடி கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் என்னை இழுத்து சென்று கடலில் கால் நனைக்க வைத்து விட்டனர். அவ்வளவுதான். அதுவரையிருந்த பயம் எங்கே போனதென்று தெரியவில்லை.

இதுவரை கடலுக்கு வர மாட்டேன் என்று சொல்லி கொண்டிருந்தேன் அல்லவா? இப்போது கடலை விட்டு வெளியே வராமல் விளையாடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் புரிந்தது. நம் வாழ்க்கையில் சில விஷயங்களை என்னாகுமோ என்று பயந்துகொண்டு செய்யாமலேயே ரொம்ப நாட்களாக தள்ளி போட்டுக்கொண்டிருப்போம். சில விஷயங்களை எதிர்க்கொள்ள தைரியமிருக்காது. அதனால் அதை பிறகு செய்து கொள்ளலாம் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளுவோம்.

ஆனால் ஒரே ஒருமுறை அந்த பயத்தை எதிர்கொண்டு விட்டால் போதும், இவ்வளவு நாள் பயந்தது ஒன்னுமேயில்லாத விஷயத்துக்கு என்பது புரிந்துவிடும்.

ஆங்கிலத்தில் ஒரு அழகான வாக்கியமுண்டு,

When it feels scary to jump, that is exactly when you jump, otherwise you end up staying in the same place your entire life.

இதை நாம் முயற்சி செய்து பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அடுத்தவர்கள் வாழ்க்கையில் நடப்பது நமக்கு பாடம் மட்டுமே. அதை நாம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். ஆனால் நம் வாழ்க்கையில் நடப்பதைதான் நாம் ரசித்து, அனுபவித்து உணர முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT