Image credit -pixabay
Motivation

எதைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறலாம்?

சேலம் சுபா

ங்களுக்கு நடந்த எல்லாவற்றையும் கொண்டு, ஒன்று நீங்கள் வருந்தலாம் அல்லது அவையனைத்தும் பரிசுகள் எனக் கொள்ளலாம். அனைத்துமே நீங்கள் வளரத்தரப்பட்ட ஒரு வாய்ப்பு அல்லது உங்கள் வளர்ச்சியைத் தடை செய்யும் ஒன்று. நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். -Wayne W. Dyer.

வானவில்லின் வர்ணங்கள் போல விதவிதமான அனுபவங்கள் மாறி மாறி வருவதே வாழ்க்கையின் நியதி. வெற்றி வந்தால் மகிழும் மனம் தோல்வியைத் தாங்க முடியாமல் சுருண்டு விடுகிறது. அனுபவங்களை நாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் மேலே சொன்ன கருத்து சுட்டுகிறது.

நமக்கு நிகழ்ந்தவைகளை அல்லது சூழல்களை நினைத்து வருந்துவது ஒரு வழி என்றால் அதையே பரிசாக எண்ணி அப்படி நிகழாமல் மன அமைதியுடன் மேலும் கவனம் செலுத்துவது மற்றொரு வழி. மனநிலை என்பது ஒன்று நேர்மறையாக இருக்கும் அல்லது எதிர்மறையாக இருக்கும். நமக்குள்ளே ஒரு உள்ளுணர்வு உணர்த்தும் இது முடியும் அல்லது முடியாது என்று.

அந்த உள்ளுணர்வு சொல்லும் பாதையை சரியாகக் கண்டு கொண்டு எதிர்மறையை விட்டு நேர்மறை மனநிலையை உருவாக்கிக் கொள்ள நாம்தான் முயலவேண்டும். அதிக சதவிகிதத்துடன் இருக்கும் எதிர்மறை சிந்தனையை ஒதுக்கிவிட்டு கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் நேர்மறை மனநிலை பெற முயல வேண்டும். முக்கியமாக திறமைகளை பெருக்கிக்கொள்ள வேண்டும். நாம் எந்த அளவுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போகலாம்.

ரமேஷ் எனும் இளைஞர் படித்தது பிளஸ் டூ மட்டுமே. காரணம் வீட்டின் வறுமை. தந்தை செருப்புத் தைக்கும் தொழிலாளி. தாயோ வீட்டு வேலை செய்பவர். பள்ளி இறுதி வகுப்பு முடித்ததும் ரமேஷையும் செருப்பு தைக்கும் தொழிலைக் கற்றுக்கொள்ள வைத்து அதில் ஈடுபட வைத்தார் தந்தை. ஆனால் அவர் மனம் தளரவில்லை. செருப்பு தைக்கும் தொழிலைத் தொடர்ந்து கொண்டே தொலைதூர அஞ்சல் நிலை கல்வியில் படித்து பட்டமும் பெற்றார். தொடர்ந்து இலவச ஐஏஎஸ் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து படித்தார்.

காலை முதல் மாலை வரை தந்தையுடன் சிறு பிளாட்பாரக் கடையில் செருப்பு தைக்கும் பணியை செய்யும் ரமேஷ் இரவு முழுவதும் படித்து ஐஏஎஸ் தேர்வை சந்தித்து இருமுறை தோல்வியைத் தழுவி 3வது முறை தேர்வு பெற்றார்.

அவரது பெற்றோர் கல்வி அறிவற்றவர்கள் புரிந்து கொள்ள மறுப்பார்கள் என்பதால் தான் ஐஏஎஸ் படிப்பதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே சமயம் தந்தையின் தொழிலிலும் உதவினார். இப்போது உதவி  ஆட்சியாளர் பணியில் இருக்கும் மகனைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விடுகின்றனர் அந்த ஏழைப் பெற்றோர்.

ரமேஷ் தன் ஏழ்மை நிலையை நினைத்து வருந்தவில்லை. செருப்புத் தைக்கும் பணியைக் கற்றுக்கொண்டபோது அது தன் தந்தையின் பரிசாக எண்ணினார். தன் வறுமை முதல் அனைத்தும் தன் வளர்ச்சிக்கே என்ற தெளிவுடனும் திறமைகளை வளர்த்து வெற்றி பெற்ற ரமேஷ் இப்போது நிறைய இளைஞர்களின் முன்னுதாரணம்.

வருந்தாமல் தேர்வு செய்யுங்கள். கிடைத்ததை வைத்து நிச்சயம் ஜெயிக்கலாம்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT